சிம்லா:ஹிமாச்சல பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. சோலன், சிம்லா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. இதனால், பல இடங்களில் வீடுகள் இடிந்தன. சாலைகள் சேதமடைந்தன. பல பகுதிகளில் மரங்கள் சாய்ந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கடந்த 13ஆம் தேதி சோலன் மாவட்டத்தில் ஜடோன் என்ற கிராமத்தில் மேக வெடிப்பு காரணமாக திடீரென கனமழை கொட்டித் தீர்த்தது. இந்த கனமழையால் அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக மாறியது. இரண்டு வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதில், அந்த வீடுகளில் வசித்து வந்த 7 பேர் இடிபாடுகளில் புதைந்து உயிரிழந்தனர். இதேபோல், ஹிமாச்சலபிரதேசத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சூழலில் ஹிமாச்சலபிரதேசத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சிம்லாவில் சம்மர் ஹில் பகுதியில் நேற்று(ஆகஸ்ட் 15) கனமழை காரணமாக பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அதேபோல், சிம்லாவின் கிருஷ்ணா நகர் பகுதியில் நேற்று (ஆகஸ்ட். 15) ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 7 வீடுகள் இடிந்து விழுந்தன.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பேரிடர் மீட்புப் படையினர் நிலச்சரிவு நடந்த இடத்திற்கு சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தேசிய மற்றும் பேரிடர் மீட்புப் படையினர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கியுள்ள பொதுமக்களை மீட்டு, பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டனர். மீட்புப் பணிக்காக விமானப்படையின் மீட்பு ஹெலிகாப்டரில் ராணுவ வீரர்களும் சென்றுள்ளனர்.