தமிழ்நாடு

tamil nadu

"ஜவஹர்லால் நேரு, ஜனநாயகத்தின் வெற்றியாளர்" - மல்லிகார்ஜுன கார்கே புகழாரம்!

By

Published : Nov 14, 2022, 5:47 PM IST

ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளையொட்டி, சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Jawaharlal
Jawaharlal

டெல்லி: இந்தியாவின் முதல் பிரதமரான பண்டித ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள் இன்று(நவம்பர் 14) கொண்டாடப்படுகிறது. குழந்தைகள் மீது தீராத பிரியம் கொண்ட நேருவின் பிறந்த நாள், அவரது விருப்பப்படியே குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.

1954ஆம் ஆண்டிலிருந்து, நேரு பிறந்த நாள் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, நேருவின் 133ஆவது பிறந்தநாளான இன்று நாடு முழுவதும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.

நேருவின் பிறந்தநாளையொட்டி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். அதேபோல் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோரும் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.

நேரு குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள கார்கே, நேரு நவீன இந்தியாவை உருவாக்கியவர் என்றும், அவரது பங்களிப்பின்றி 21ஆவது நூற்றாண்டில் இந்தியாவை நினைத்துப் பார்க்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார். அவர் ஜனநாயகத்தின் வெற்றியாளர் என்றும், அவரது முற்போக்கு எண்ணங்கள்தான் இந்தியாவின் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தியது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 'நமது முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு மரியாதை செலுத்துவதாகவும், அவரது பிறந்தநாளில் நமது தேசத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பை நினைவு கூர்வதாகவும்' குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: 'பாஜகவுக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது' சீத்தாராம் யெச்சூரி

ABOUT THE AUTHOR

...view details