தமிழ்நாடு

tamil nadu

Aditya-L1 launch: சந்திரனை தொடர்ந்து சூரியனில் ஆய்வு: விண்ணில் பாய்கிறது இஸ்ரோவின் ஆதித்யா-எல்1.!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 28, 2023, 4:00 PM IST

Updated : Aug 28, 2023, 8:01 PM IST

Aditya-L1 launch: இந்தியாவில் இருந்து சூரியனை ஆய்வு செய்வதற்காக முதன் முறையாக ஆதித்யா எல்1 விண்கலம், வருகிற செப்டம்பர் 2 அன்று விண்ணில் பாய உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

பெங்களூரு:சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா-எல்1 விண்கலம் வரும் செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து அன்று காலை 11.50 மணிக்கு சூரியனை நோக்கி பயணிக்கவுள்ள ஆதித்யா-எல்1 பூமியில் இருந்து 1.5 மில்லியன் கிலோமீட்டர் வரை சென்று சூரியனை ஆய்வு செய்யவுள்ளது.

சந்திரயான் 3 வெற்றியை தொடர்ந்து இஸ்ரோவின் ஆதித்யா-எல்1 வெற்றியை எதிர்நோக்கி இருக்கிறது இந்தியா. இது குறித்த அறிவிப்பை இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில், ஆதித்யா-எல்1 விண்ணில் ஏவப்படும் நிகழ்வைக் காண பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இதன் மூலம் சூரிய புயல், வெப்பம், காலநிலை மாற்றம் உள்ளிட்ட இயற்கையில் பல்வேறு செயல்பாடுகளை ஆய்வு செய்ய முடியும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்த ஆதித்யா-எல்1 முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு, சூரியனை ஆய்வு செய்ய இந்தியாவால் அனுப்பப்படும் முதல் விண்கலம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து பிஎஸ்எல்வி C57 ராக்கெட் மூலம் ஆதித்யா-எல்1 விண்ணில் ஏவப்படவுள்ளது. பூமி மற்றும் சூரியனுக்கு இடையேயான லாக்ரேஞ்ச் புள்ளி (L1)-யை அடைந்து, அங்கு ஒரு வட்டப்பாதையை அமைத்து ஆதித்யா-எல்1 ஆய்வு மையமாக செயல்படவுள்ளது.

பூமியில் இருந்து லாக்ரேஞ்ச் புள்ளியை சென்றடைய ஆதித்யா-எல்1-க்கு 4 மாதங்கள் ஆகும் எனவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமியில் இருந்து ஏவப்படும் ஆதித்யா-எல்1 விண்கலம் பூமியின் சுற்றுவட்டப்பாதையை முடித்துக்கொண்டு அதாவது புவியின் ஈர்ப்பு விசையை கடந்த பிறகு, அங்கிருந்து வெளியேற்றப்படும்.

அதனை தொடர்ந்து ஆதித்யா-எல்1 cruise phase எனும் அடுத்த கட்டத்தை முடித்துக்கொண்டு லாக்ரேஞ்ச் புள்ளியை நோக்கி வட்டப்பாதையில் உள் உந்துவிசை மூலம் செலுத்தப்படும். இந்த செயல்பாடுகள் அனைத்தையும் விஞ்ஞானிகள் இஸ்ரோ ஆய்வு மையத்தில் இருந்து மேற்கொண்டு தொடர்ந்து கண்காணிக்கவுள்ளனர்.

கடைசியாக லாக்ரேஞ்ச் புள்ளியை சென்றடையும் ஆதித்யா-எல்1 அங்கு சூரிய ஆய்வு மையத்தை நிறுவி சூரியனின் செயல்பாடுகள் குறித்து 24 மணி நேரமும் முழு ஆய்வு மேற்கொள்ளும்.

இந்த ஆய்வை மேற்கொள்ள ஏழு பேலோடுகளை சுமந்துகொண்டு விண்ணில் பாயவுள்ளது ஆதித்யா-எல்1. இதன் மூலம் ஒளிக்கோளம், குரோமோஸ்பியர் மற்றும் சூரியனின் வெளிப்புற அடுக்குகளை (கொரோனா) கவனித்து முன்கூட்டியே பூமிக்கு தகவல் அனுப்ப முடியும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்

இந்த ஏழு பேலோடுகளில் நான்கு பேலோடுகள் சூரியனை நேரடியாக பார்த்தபடி ஆய்வு மேற்கொள்ளும் எனவும் மீதமுள்ள 3 பேலோடுகள் லாக்ரேஞ்ச் புள்ளி (L1)-யில் உள்ள துகள்கள் மற்றும் புலங்கள் குறித்து ஆய்வு செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரோவின் அடுத்த சாதனை பட்டியலில் இடம்பெறவுள்ள ஆதித்யா-எல்1 ஏவுகணை விண்ணில் ஏவப்படும் நிகழ்வைக் காண, சத்தீஷ்தவான் மையத்தின் இணையதளம் மூலம் பதிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:நடுவானில் திக் திக்.. குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய எய்ம்ஸ் மருத்துவர்கள்

Last Updated : Aug 28, 2023, 8:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details