டெல்லி: இந்தியாவில் கரோனா மூன்றாவது அலை பரவத் தொடங்கி தற்போது கரோனா பரவல் படிப்படியாகக் குறைந்துவருகிறது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் 83 ஆயிரத்து 876 பேர் புதிதாக கரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 32 நாள்களாக ஒரு லட்சத்துக்கும் அதிகமான தொற்று இருந்த நிலையில் இன்று குறைந்துள்ளது எனத் தெரிவித்துள்ளது.
இன்று 895 பேர் கரோனாவால் இறந்துள்ளனர். இதன்மூலம் இந்தியாவில் கரோனவால் இறந்தவர்களின் எண்ணிக்கை ஐந்து லட்சத்து இரண்டாயிரத்து 874 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 96.19 விழுக்காடாக உயர்ந்துள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 24 மணிநேரத்தில் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 73 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் தினசரி பரவல் விகிதம் 7.25 விழுக்காடாகவும், வாராந்திர பரவல் விகிதம் 9.18 விழுக்காடாகவும் பதிவாகியுள்ளது, என மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நோயிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை நான்கு கோடியே ஆறு லட்சத்து 60 ஆயிரத்து 202 ஆக உயர்ந்துள்ளது. ஒரு நாளுக்கு இறப்பு விகிதம் 1.19 விழுக்காடாக உள்ளது.