தமிழ்நாடு

tamil nadu

பேமலி பேக் ஐஸ்கிரீமில் விஷம்.. சிறுவன் பலி; உறவினர் கைது.. கேரளாவில் நடந்தது என்ன?

By

Published : Apr 21, 2023, 6:44 PM IST

கோழிக்கோடு அருகே குடும்பத் தகராறில் விஷம் கலந்த ஐஸ்க்ரீமை கொடுத்து சிறுவனை கொலை செய்த வழக்கில், பெண் கைது செய்யப்பட்டார்.

KERALA MURDER
கேரளா கொலை

கோழிக்கோடு:கேரள மாநிலம் அரிக்குளம் பகுதியை சேர்ந்த கோரோத் முகமது அலியின் மகன் அகமது ஹாசன் ரிஃபாய் (12). கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டில் இருந்த ஐஸ்க்ரீமை சாப்பிட்டான். பின்னர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு இறந்தான். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில், ஐஸ்க்ரீமை சாப்பிட்ட ஹாசன் வாந்தி எடுத்ததால், அவனை முத்தம்பியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெற்றோர் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மேப்பயூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுவன் ஹாசன் சேர்க்கப்பட்டான்.

எனினும் அவனது உடல்நலம் மோசமானதால், கடந்த திங்கள்கிழமை மேல் சிகிச்சைக்காக கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அங்கு சிகிச்சை பலனின்றி அவன் இறந்தது தெரியவந்தது. இதையடுத்து உடற்கூராய்வுக்காக கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சடலம் கொண்டு செல்லப்பட்டது.

இந்நிலையில் உடற்கூராய்வின் போது சிறுவன் ஹாசனின் உடலில் அமோனியம் பாஸ்பரஸ் என்ற விஷம் கலந்திருப்பது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது ஹாசன் சாப்பிட்ட ஐஸ்க்ரீம், அரிக்குளம் பகுதியில் உள்ள கடையில் வாங்கப்பட்டது கண்டறியப்பட்டது. பின்னர் அங்கு சென்ற உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் கடையில் ஆய்வு மேற்கொண்டனர்.

இதற்கிடையே, முகமது அலியின் சகோதரி தாஹிரா மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகம் வலுத்தது. பின்னர், ஐஸ்க்ரீமில் விஷம் கலந்ததாக அவர் ஒப்புக்கொண்டார். முகமது அலியும், அவரது சகோதரி தாஹிராவும் ஒரே பகுதியில் வசிக்கின்றனர். முகமது அலியின் மனைவிக்கும், தாஹிராவுக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவரை கொலை செய்ய தாஹிரா திட்டமிட்டது தெரியவந்துள்ளது.

அதன்படி, கடைக்கு சென்று ஐஸ்க்ரீமை வாங்கிய தாஹிரா அதில் விஷத்தை கலந்துள்ளார். பின்னர் அதை, முகமது அலியின் வீட்டில் வைத்துவிட்டு சென்றுள்ளார். அப்போது அதை, சிறுவன் ஹாசன் எடுத்து சாப்பிட்டதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இந்நிலையில் கொலையாளி தாஹிரா மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. அவரை கைது செய்துள்ள போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: 8 வயது சிறுவன் கழுத்து நெரித்துக் கொலை: நரபலியா? திடுக்கிடும் பின்னணி!

ABOUT THE AUTHOR

...view details