தமிழ்நாடு

tamil nadu

Emergency Exit: இண்டிகோ அறிக்கை அளிக்க டிஜிசிஏ உத்தரவு.. பொய்யர் என செந்தில் பாலாஜி ட்வீட்டியது யாரை?

By

Published : Jan 17, 2023, 4:06 PM IST

கடந்த டிசம்பர் 10ஆம் தேதி சென்னையில் இருந்து திருவனந்தபுரம் சென்ற இண்டிகோ விமானத்தில், கிளம்பும் போது எமர்ஜென்சி கதவு திறக்கப்பட்ட சம்பவம் குறித்து அறிக்கை அளிக்க உள்நாட்டு விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

IndiGo emergency Exit
IndiGo emergency Exit

டெல்லி: கடந்த டிசம்பர் 10ஆம் தேதி சென்னை விமான நிலையத்தில் இருந்து கேரள மாநிலம், திருவனந்தபுரத்திற்கு இண்டிகோ விமான நிறுவனத்தின் இண்டிகோ 6E-7339 என்ற விமானம் புறப்பட்டது. ஓடுபாதையில் இருந்து விண்ணில் பறக்க விமானம் புறப்பட்ட நிலையில், திடீரென பயணி ஒருவர் விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறந்தார். இந்த சம்பவம் சகப் பயணிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி பீதியை கிளப்பியது.

எமர்ஜென்சி கதவு திறக்கப்பட்டது குறித்து விமான ஓட்டிக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், உடனடியாக விமானம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றட்டனர். தொடர்ந்து விமானத்தில் பாதுகாப்பு சோதனை நடத்தப்பட்டு, ஏறத்தாழ 3 மணி நேரத்திற்குப் பின் விமானம் மீண்டும் புறப்பட்டுச் சென்றது.

இந்தச் சம்பவம் தொடர்பாக இண்டிகோ விமான நிறுவனம் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு உள்நாட்டு விமான போக்குவரத்து இயக்குநரகமான டி.ஜி.சி.ஏ. உத்தரவிட்டுள்ளது. மேலும் இண்டிகோ விமானம் புறப்படும்போது எமர்ஜென்சி கதவை பயணி திறந்தது குறித்து விசாரித்து வருவதாகவும் சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இண்டிகோ விமானத்தின் எமர்ஜென்சி கதவு திறக்கப்பட்டது தொடர்பாக தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தன் ட்விட்டர் பக்கத்தில், கடந்த டிசம்பர் 29ஆம் தேதி ட்வீட் ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதில், "கடந்த 10ஆம் தேதி போட்டோஷாப் கட்சியின் மாநிலத் தலைவரும், இளைஞரணியின் தேசியத் தலைவரும், விமானம் கிளம்பும் போது பொறுப்பே இல்லாமல் விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறந்து விளையாடியிருக்கிறார்கள்.

விதிமுறைகளின்படி விமானத்தில் பயணிகள் இருந்து இறக்கப்பட்டு, மீண்டும் சோதனை செய்யப்பட்டு நோகடிக்கப்பட்டு இருக்கிறார்கள். விமானம் 3 மணி நேரம் தாமதமாக கிளம்பி இருக்கிறது. மன்னிப்பு கடிதம் எழுதுவதே பரம்பரை வழக்கம் என்பதால், அன்றும் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்திருக்கிறார்கள். ஊடகங்களில் இந்தச் செய்தி ஏன் வரவில்லை" என அமைச்சர் செந்தில் பாலாஜி பதிவிட்டு இருந்தார்.

இந்நிலையில், இண்டிகோ விமானத்தில் எமர்ஜென்சி கதவு திறக்கப்பட்டது குறித்து டிஜிசிஏ விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது தொடர்பாகவும் தன் ட்விட்டர் பக்கத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி கருத்து பதிவிட்டுள்ளார். அதில் "2 ஆர்வக்கோளாறுகள் விமானத்தின் Emergency கதவை திறந்து விளையாடியது பற்றி டிச-29 அன்று நான் கேள்வியெழுப்பி இருந்தேன்.

இன்று DGCA விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. வெளிநாட்டு வாட்ச் கட்டுவது தேசப்பற்றென உருட்டிய பொய்யர், சுதந்திர காற்றை சுவாசிக்க கதவை திறந்தேன் என உருட்டாமல் இருந்தால் சரி’’ என அமைச்சர் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின் அனல் பறக்கும் க்ளிக்ஸ்

ABOUT THE AUTHOR

...view details