டெல்லி: நாட்டில் முதல் குரங்கம்மை நோய் பாதிப்பு கடந்த ஜூலை 15ஆம் தேதி கேரளாவில் பதிவானது. தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரக்கத்தில் இருந்து கேரளா வந்த இருவருக்கு அடுத்தடுத்து குரங்கம்மை இருப்பது உறுதியானது.
பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்த நிலையில், கேரளா மட்டுமல்லாமல் நாடு முழுவதும் குரங்கம்மை நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. மேலும், நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் மருத்துவ பரிசோதனையை தீவிரப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், டெல்லியைச் சேர்ந்த 31 வயதான ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு இன்று (ஜூலை 24) கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. காய்ச்சல் மற்றும் தோலில் ஏற்பட்ட புண்கள் காரணமாக மூன்று நாள்களுக்கு முன்னர் டெல்லி மௌலானா ஆசாத் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இவரின் பரிசோதனை மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.