தமிழ்நாடு

tamil nadu

காவிரியிலிருந்து 2600 கன அடி தண்ணீர் தமிழகத்திற்குத் திறக்க கர்நாடக அரசுக்குக் காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரை!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 30, 2023, 5:38 PM IST

Cauvery Water Regulation Committee: கர்நாடக அரசு காவிரியிலிருந்து தமிழகத்திற்கு நவம்பர் 1 முதல் 15ஆம் தேதி வரை 2600 கன அடி தண்ணீர் திறக்க காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை செய்துள்ளது.

cwrc-recommends-karnataka-to-release-2600-cusecs-of-water-per-day-to-tamil-nadu
காவிரியிலிருந்து 2600 கன அடி தண்ணீர் தமிழகத்திற்குத் திறக்க கர்நாடக அரசுக்குக் காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரை!

டெல்லி:காவிரியிலிருந்து தமிழ்நாட்டிற்கு நவம்பர் 1 முதல் 15ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு 2600 கன அடி தண்ணீரைக் கர்நாடக அரசு திறந்து விட வேண்டும் எனக் காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது. காவிரி நீர் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் படி மத்திய அரசு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழு அமைக்கப்பட்டது.

இந்த காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவில் கர்நாடகா, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளா மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த நிலையில் நவம்பர் மாதம் தமிழ்நாட்டிற்குக் காவிரியிலிருந்து தண்ணீர் திறப்பது குறித்து காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 89வது கூட்டம் இன்று (அக்.30) டெல்லியில் நடைபெற்றது.

காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு தலைவர் வினீத் குப்தா தலைமையில் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 89வது கூட்டம் காணொளி மூலம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு கர்நாடகா புதுச்சேரி மற்றும் கேரளா தரப்பில் அதிகாரிகள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு அரசு தரப்பில் தொழில்நுட்பக் குழுத் தலைவர் சுப்ரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கர்நாடக அரசு தரப்பில், கர்நாடகா மாநிலத்திலும் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் போதிய மழை பொழிவு இல்லாததால் கர்நாடகா மாநிலத்திற்கு போதிய தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது எனத் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்து விட முடியாத நிலை உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு தரப்பில், கர்நாடகா அரசு அடுத்து வரும் 15 நாட்களுக்கு 16.90 டி.எம்.சி தண்ணீர் திறந்து விட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து காவிரி நீர் ஒழுங்காற்று குழு தரப்பில், தமிழ்நாட்டிற்கு நவம்பர் 1ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு 2600 கன அடி தண்ணீரைக் கர்நாடக அரசு காவிரி பில்லிக்குண்டு வழியாகத் திறந்து விட வேண்டும் எனப் பரிந்துரை செய்ததது.

ஆனால், கர்நாடக அரசு அதனை ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையானது காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடம் தெரிவிக்கப்படும். அதன்படி, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பிறப்பிக்கும் உத்தரவே இறுதியானது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:கேரள குண்டு வெடிப்பு: பலி எண்ணிக்கை 3ஆக உயர்வு! சிகிச்சை பலனின்றி 12 வயது சிறுமி உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details