தமிழ்நாடு

tamil nadu

கேரள தங்கம் கடத்தல் விவகாரம்: தாவூத் இப்ராஹிமிற்குத் தொடர்பா?

By

Published : Oct 15, 2020, 7:38 AM IST

கொச்சி: கேரள தங்கக் கடத்தல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு தாவூத் இப்ராஹிமின் டி-நிறுவனத்துடன் தொடர்பு இருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது என்று கொச்சியில் உள்ள சிறப்பு என்ஐஏ நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

கேரள தங்கம் கடத்தல் விவகாரம்: தாவூத் இப்ராஹிமிற்கு தொடர்பா?
கேரள தங்கம் கடத்தல் விவகாரம்: தாவூத் இப்ராஹிமிற்கு தொடர்பா?

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ரூ.14.82 கோடி மதிப்பிலான 30 கிலோ தங்கத்தை கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி சுங்கத் துறை அலுவலர்கள் கைப்பற்றினர்.

இந்தக் கடத்தல் சம்பவத்தில் முக்கியக் குற்றவாளியாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ், கேரள முதலமைச்சர் அலுவலகத்தில் தனக்குள்ள நெருக்கம் மூலம் இந்தக் கடத்தலில் ஈடுபட்டார் எனப் புகார் எழுந்தது.

இதில் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நபர்கள் தங்களுக்குப் பிணை வழங்கக்கோரி தேசிய புலனாய்வு முகமை சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். ஏழு பேரின் பிணை மனுவுக்குப் பதிலளிக்கும்விதமாக தேசிய புலனாய்வு அமைப்பு சார்பில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

குற்றஞ்சாட்டப்பட்ட ரமீஸ் கே.டி., ஷராபுதீன் ஆகியோர் தான்சானியாவுக்குச் சென்று துப்பாக்கிகள் விற்கப்படும் கடைகளுக்குப் போனதாக தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது.

டி-நிறுவனம் செயலில் இருக்கும் முக்கிய இடங்கள் தான்சானியா, துபாய் ஆகியவை. தான்சானியாவில், வைர வணிகத்திற்கான உரிமம் வாங்க ரமீஸ் முயற்சித்ததாகவும், பின்னர் அவர் தங்கத்தை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு கடத்திச் சென்றார் என்றும் தேசிய புலனாய்வு முகமை வழக்கறிஞர் கூறினார்.

"தான்சானியாவில் டி-நிறுவனத்தின் விவகாரங்கள் தென்னிந்தியரான ஃபிரோஸ் ஒயாசிஸால் கையாளப்படுகின்றன. டி-நிறுவனத்துடன் ரமீஸிற்குத் தொடர்பு இருப்பதாக நாங்கள் சந்தேகிக்கிறோம்.

13.22 மி.மீ. துளை துப்பாக்கிகளை கடத்தியதற்காக ரமீஸ் 2019 நவம்பரில் சுங்கத் துறையினரால் கைதுசெய்யப்பட்டார். தங்கக் கடத்தல் நடந்துகொண்டிருந்தபோது இது நடந்தது ” என்று தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது.

இந்தியாவின் பொருளாதார நிறுவனங்களுக்கான புலனாய்வு அமைப்பான மத்திய பொருளாதார புலனாய்வுப் பணியகம் (சிஇஐபி), கேரளாவில் தங்கக் கடத்தலில் இருந்து கிடைக்கும் வருமானத்தை பயங்கரவாதத்திற்காகப் பயன்படுத்துவது குறித்து 2019 அக்டோபரில் தேசிய புலனாய்வு முகமை தலைவருக்கு (Director General of NIA) அறிக்கை அனுப்பியதாகவும் என்ஐஏ தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details