தமிழ்நாடு

tamil nadu

காதல் விவகாரம்: மகள் கழுத்தை நெறித்து கொலைசெய்த பெற்றோர் கைது!

By

Published : Jun 10, 2020, 10:59 AM IST

ஹைதராபாத்: தெலங்கானாவின் ஜோகுலாம்பா அருகே மகள் வேறு சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை காதலித்து கர்ப்பமாக இருப்பதை அறிந்த பெற்றோர்அவரின் கழுத்தை நெறித்து கொலை செய்தனர்.

தெலுங்கானாவில் மகளை கொன்ற பெற்றோர் கைது
மகளை கொலைசெய்த பெற்றோர் கைது

தெலங்கானா மாநிலம் கத்வால் மாவட்டம் ஜோகுலாம்பா பகுதியை சேர்ந்தவர் திவ்யா (20). இவர் அண்டை மாநிலமான ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பட்டப்படிப்பு படித்துவந்தார்.

கடந்த மார்ச் மாதம் நாடு தழுவிய பூட்டுதல் விதிக்கப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வீடு திரும்பிய அவர் வேறொரு சமூகத்தைச் சேர்ந்த ஒரு இளைஞரைக் காதலித்ததாக கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களாக திவ்யா வயிற்று வலியால் சிரமப்பட்டு வந்ததால் அவரது பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் கருக்கலைப்பு செய்ய வேண்டும் என திவ்யாவிடம் கூறியுள்ளனர்.

ஆனால், அதற்கு மறுத்த திவ்யா, தான் காதலிக்கும் இளைஞருடன் சேர்த்துவைக்குமாறு கேட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அவரது பெற்றோர், வேறு சமூகத்தைச் சேர்ந்தவருக்கு திவ்யாவை திருமணம் செய்து கொடுக்க மனம் இல்லாமல் இவ்விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர நினைத்தனர். அதனைத் தொடர்ந்து திவ்யா தூங்கிக் கொண்டிருந்தபோது தலையணையால் முகத்தை மூடி, கழுத்தை நெரித்துக் கொலைசெய்தனர்.

பின்னர், திவ்யா மாரடைப்பால் உயிரிழந்ததாக உறவினர்களுக்கு தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த காவல் துறையினர், திவ்யா வீட்டிற்கு வந்து அவரது பெற்றோரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்த அவர்கள்ர் இறுதியில் மகளை கொலைசெய்ததை ஒப்புக்கொண்டனர். பின்னர், அவர்களை கைதுசெய்த காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையிலடைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details