தமிழ்நாடு

tamil nadu

அயோத்தி வந்த குட்டி ராமர்! ராமர் கோயிலில் நிறுவப்பட்ட ராம் லாலா சிலைக்கு சிறப்பு பூஜை!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 18, 2024, 10:46 PM IST

Ram Lalla idol: அயோத்தி ராமர் கோயிலில் ஜனவரி 22ஆம் தேதி நடைபெறும் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, இன்று (ஜன. 18) கோயில் கருவறையில் ராம் லாலா சிலை நிறுவப்பட்டது.

Ram Lalla idol
அயோத்தி ராமர் கோயில்

உத்திர பிரதேசம்:வருகிற 22ஆம் தேதி அயோத்தியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதில், பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார். அது மட்டுமல்லாமல், அரசியல் பிரமுகர்கள், திரைப்பிரபலங்கள், தொழிலதிபர்கள், குருக்கள் என 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.

அன்றைய தினம் ராம் லாலா எனப்படும் குழந்தை ராமர் சிலையும் நிறுவப்பட உள்ளது. இதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள ராம் லாலா சிலை அயோத்திக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் இந்த சிலையை கோயில் வளாகத்திற்குள் கொண்டு செல்ல கிரேன் பயன்படுத்தப்பட்டது. மைசூரு சிற்பி அருண் யோகிராஜ் கருங்கல்லில் செதுக்கிய இந்தச் சிலை, சுமார் 150-200 கிலோ எடையுள்ளது.

தற்போது, கோயிலுக்கு சிலை எடுத்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும், சிலை இன்று நிறுவப்பட்டதை தொடர்ந்து இன்று முதல் ஒவ்வொரு நாளும் சடங்குகள் ராம் லாலாவின் பிரதிஷ்டை வரை தொடரும். முன்னதாக, ஜனவரி 22ஆம் தேதியான ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரை, 7 நாட்களுக்கு நடைபெறும் சிறப்புப் பூஜைகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

மேலும், 22ஆம் தேதி நடைபெற உள்ள ராமர் கோயில் குடமுழுக்கு விழாவில், குறைந்தபட்சம் 121 ஆச்சாரியார்கள் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அன்றைய தினம் மதியம் 12.20 மணியளவில் கும்பாபிஷேகம் தொடங்கி, 1 மணிக்கு முடிவடையும் எனவும் கூறப்படுகிறது.

பலத்த பாதுகாப்பு: ராமர் கோயில் கும்பாபிஷேகம் பல்வேறு முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ள இருப்பதால் அயோத்தி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோயிலைச் சுற்றி 4.5 கிலோமீட்டர் தூரம் வரை கண்காணிக்க ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய 10 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அம்மாநில போலீசார் நவீன ஆயுதங்களுடன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இதில், 100 துணை காவல் கண்காணிப்பாளர்கள், 325 காவல் ஆய்வாளர்கள், 800 துணை காவல் ஆய்வாளர்கள் மற்றும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துணை ராணுவத்தினர் அயோத்தியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இதையும் படிங்க:பிரதமர் மோடி தமிழகம் வருகை! எங்கெல்லாம் செல்கிறார்? முழுத் தகவல்!

ABOUT THE AUTHOR

...view details