ஹைதராபாத்: கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி அறிவிக்கப்பட்ட 69வது தேசிய திரைப்பட விருதில் "புஷ்பா தி ரைஸ்" படத்தில் நடித்ததற்காக தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டது. சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டதை அடுத்து நடிகர் அல்லு அர்ஜூனுக்கு அனைத்துத் தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
மேலும் சிறந்த நடிகருக்கான தேசிய விருது வென்ற முதல் தெலுங்கு நடிகர் என்ற பெறுமையையும் அல்லு அர்ஜுன் பெற்று உள்ளார். இதனால், அல்லு அர்ஜுன் மற்றும் மெகா ஸ்டார் சிரஞ்சீவி குடும்பத்திலும் இதனை கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ஆகஸ்ட் 26, அல்லு அர்ஜுன் தனது தாய்வழி மாமாவும் மெகா ஸ்டாருமான சிரஞ்சீவியுடன் தேசிய விருது வென்ற மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.
அந்த புகைப்படங்களை, அல்லு அர்ஜுன் குடும்பத்தால் நடத்தப்படும் தயாரிப்பு பேனர்களான "கீதா ஆர்ட்ஸ்" மற்றும் "அல்லு என்டர்டெயின்மென்ட்" ஆகிய இரண்டு நிறுவனங்களும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து உள்ளன. பகிரப்பட்ட புகைப்படங்களில், அல்லு அர்ஜுன் சிரஞ்சீவியிடம் இருந்து பூங்கொத்தை பெறுவது போலவும், மெகா ஸ்டார் சிரஞ்சீவி, நடிகர் அல்லு அர்ஜுனுக்கு இனிப்புகளை ஊட்டுவதை போலவும் உள்ளது.