அண்ணாமலையார் கோயிலில் மாசி மாத பிரதோஷம்.. ஏராளமான பக்தர்கள் தரிசனம்..!
Published : Feb 22, 2024, 7:18 AM IST
திருவண்ணாமலை: பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும் விளங்குவது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில். இங்கு, மாதந்தோறும் வளர்பிறை மற்றும் தேய்பிறை பிரதோஷ தினத்தன்று கோயிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபம் அருகே அமைந்துள்ள பெரிய நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, நேற்று (பிப்.21) மாசி மாதம் பிரதோஷத்தை முன்னிட்டு, பெரிய நந்தி பகவானுக்கு அரிசி மாவு, மஞ்சள் தூள், தேன், பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீர், கரும்புச்சாறு, எலுமிச்சை சாறு, விபூதி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர், அருகம்புல், வில்வ இலை, சாமந்திப்பூ, மல்லி, கனகாம்பரம் ஆகிய பல்வேறு விதமான வண்ண மலர்களால் பூ மாலை அலங்காரம் செய்து சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க மகா தீபாராதனை நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு நந்தி பகவானைத் தரிசனம் செய்தனர்.
பிரதோஷ தினத்தின் பொழுது நந்தி பகவானை வழிபட்டால் நினைத்த, அனைத்து காரியங்களும் நிறைவேறும். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமண பாக்கியம் கிடைக்கும். குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்.