தமிழ்நாடு

tamil nadu

திம்பம் வனப்பகுதி அருகே ஓடையில் ஜாலியாக உறங்கிய சிறுத்தை.. வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 1, 2024, 1:17 PM IST

திம்பம் வனப்பகுதி ஓடையில் ஜாலியாக உறங்கும் சிறுத்தை

ஈரோடு: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், திம்பம் வனப்பகுதியில் இருந்து தலமலைக்குச் செல்லும் வழியில் உள்ள ஓடையில் சிறுத்தை ஒன்று படுத்திருந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

மேலும், திம்பம் வனப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளதால் வனத்துறையினர் சார்பில் ஆங்காங்கே சிறுத்தை நடமாட்டம் குறித்து எச்சரிக்கைப் பலகை வைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், அடர்ந்த காட்டுப்பகுதியான திம்பம் சாலையில் செல்ல உள்ளூர் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. 

இந்நிலையில் நேற்று (ஜன.31) மாலை திம்பத்தில் இருந்து தலமலைக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசுப் பேருந்து சென்றுக் கொண்டிருந்தது. அப்போது திம்பத்தில் இருந்து சற்று தூரத்தில் உள்ள வன ஓடையில் சிறுத்தை படுத்திருந்ததைப் பார்த்த பயணிகள் மற்றும் பொதுமக்கள் செல்போனில் படம் பிடித்தனர்.

சிலர் ஆர்வமிகுதியால் சத்தம் போட்டதால், சிறுத்தை காட்டுக்குள் ஓடிச் சென்றது. தற்போது தலமலை சாலையில், சிறுத்தைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் இரு சக்கர வாகன ஓட்டிகள் மிகவும் கவனமாக செல்லுமாறு வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details