திருப்பத்தூர் காவல் நிலையத்திற்கு காக்கி உடையணிந்து வந்த மழலையர் பள்ளிக் குழந்தைகள்!
Published : Feb 23, 2024, 2:11 PM IST
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், சக்தி கிண்டர் கார்டன் தனியார் பள்ளியில் பயிலும் எல்கேஜி மற்றும் யுகேஜி மாணவ, மாணவிகளுக்கு, காவல் நிலையம் மற்றும் காவல் நிலைய செயல்பாடுகள் குறித்து கற்பிப்பதற்காக பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களை பேருந்து மூலமாக திருப்பத்தூர் நகர காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர். அப்போது, சில மாணவர்கள் காவல் துறை மற்றும் ராணுவ வீரர் உடையில் வந்திருந்தது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.
இவ்வாறு காவல் நிலையம் வந்த மாணவர்களுக்கு ரோஜா மற்றும் இனிப்புகள் கொடுத்து வரவேற்ற திருப்பத்தூர் நகர உதவி காவல் ஆய்வாளர் ராஜேஷ், காவல் நிலைய வருகைப் பதிவேடு, காவல் நிலையத்தில் காவலர்கள் என்னென்ன செய்வார்கள் உள்ளிட்ட காவல் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு எடுத்துக் கூறினார்.
காக்கி உடை அணிந்து காவல் நிலையத்திற்கு வந்த குழந்தைகளுக்கு, காவல் துறை அதிகாரிகள் ரோஜா மற்றும் இனிப்புகள் கொடுத்து வரவேற்றது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது.