வேலூரில் லாரி மீது கார் மோதி விபத்து: திரிபுராவைச் சேர்ந்த டாக்டர் உயிரிழப்பு
Published : Feb 25, 2024, 1:17 PM IST
வேலூர்: வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் வாதவியல் பிரிவில் மருத்துவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர், டாக்டர் தேபாஷிஷ் தண்டா(61). இவரது மனைவி சுமிதா தண்டா, சிஎம்சி மருத்துவமனையில் பொது மருத்துவப்பிரிவு மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர்.
இவர்கள் வேலூர் பாகாயம் பகுதியில் சிஎம்சி மருத்துவர்கள் குடியிருப்பு வளாகத்தில் தங்கியுள்ளனர். இந்த நிலையில், டாக்டர் தேபாஷிஷ் தண்டா நேற்று (பிப்.25) மதியம் சென்னையில் இருந்து வேலூர் நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த கார், வேலூரை அடுத்த அலமேலுரங்காபுரம் பகுதியில் வந்தபோது, இவரது காருக்கு முன்னால் சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி மீது கார் எதிர்பாராத விதத்தில் பயங்கரமாக மோதியது.
இதனால், தேபாஷிஷ் தண்டா பயணித்த கார் அப்பளம் போல் நொறுங்கியது. அதோடு, காரில் இருந்த டாக்டர் தேபாஷிஷ் தண்டா பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, தகவலறிந்த சத்துவாச்சாரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இவ்விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் விசாரணையில் விபத்தில் பலியான டாக்டர் தேபாஷிஷ் தண்டா திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக, திரிபுரா மாநிலத்தின் முதலமைச்சர் மாணிக் சாஹா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 'திரிபுரா மாநிலத்தின் புகழ்பெற்ற மருத்துவரான டாக்டர் தேபாஷிஷ் தண்டா ஒரு சோகமான சாலை விபத்தில் உயிரிழந்தார். அவர் நீண்ட காலம் வெல்லோவில் உள்ள CMC வாதவியல் பிரிவில் பணியாற்றியவர். அவரது வாழ்க்கையில் வசீகரங்களின் எண்ணிக்கை எண்ணற்றது.
இந்த மாநிலத்தின் சிறந்த மருத்துவரின் மரணம் எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிகப்பதாகவும், இந்த துயரச் சூழலில் அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.