தமிழ்நாடு

tamil nadu

அரசு மருத்துவமனையில் அளித்த தவறான சிகிச்சையால் ஏற்பட்ட விளைவு..! போராட்டத்தில் இறங்கிய பாதிக்கப்பட்ட பெண்..!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 20, 2024, 3:34 PM IST

Updated : Feb 20, 2024, 3:59 PM IST

Erode Collector Office: கோபி அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளித்ததைக் கண்டித்து 2022ஆம் ஆண்டு புகார் அளித்திருந்தும் இதுவரை எந்த அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டார்.

wrong treatment in govt hospital woman protest in erode collector office
அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளித்ததால் போராட்டம்

அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளித்ததால் போராட்டம்

ஈரோடு: அந்தியூர் அடுத்த கீழ்வானி பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் என்பவரின் மனைவி ரம்யா. இவர், கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், மகப்பேறு சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையில் அவருக்கு சுகப்பிரசவம் ஆனதாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து ரம்யாவிற்கு இயற்கை உபாதை கழிப்பதில் சிக்கல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து கோபி அரசு மருத்துவமனை மருத்துவர்களிடம் கேட்டபோது, அவர்கள் உரிய பதிலளிக்கவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. அதன் பின்னர் ரம்யாவை சிகிச்சைக்காக தங்கள் வசிக்கும் பகுதியில் அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தாக கூறப்படுகிறது.

அங்கு ரம்யாவை பரிசோதித்த மருத்துவர்கள், ரம்யாவுக்கு மகப்பேறு சிகிச்சையின் போது, இயற்கை உபாதை கழிப்பதற்கு செல்லும் நரம்பில் பிரச்னை ஏற்பட்டுள்ளதாகவும், அதனை குணப்படுத்த உரிய அறுவை சிகிச்சை செய்து கொள்ளுமாறும் தெரிவித்துள்ளனர். இதனைக் கேட்டு ரம்யாவின் உறவினர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்நிலையில், தனக்கு தவறான சிகிச்சை அளித்த கோபி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும், தனக்கு மேல் சிகிச்சைக்காக நிதி உதவி செய்ய வேண்டியும் மாவட்ட ஆட்சியர் உட்பட பல்வேறு அரசு அதிகாரிகளிடம் மனு அளித்திருந்ததாகக் கூறப்படுகிறது.

மேலும், புகார் அளித்து ஒன்றரை வருடங்கள் ஆகியும், இதுவரை அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு உறவினர்களுடன் வந்த ரம்யா, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது, கோபி அரசு மருத்துவர்களின் தவறான சிகிச்சை காரணமாக பல்வேறு சிரமங்களை சந்தித்து வருவதாக வேதனை தெரிவித்தார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் ரம்யா கூறுகையில், தான் 2022ஆம் அண்டு செப்டம்பர் 11ஆம் தேதி பிரசவ சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், சிகிச்சையில் போது தன்னுடைய இயற்கை உபாதை வெளியேற்றக் கூடிய நரம்புகளை மருத்துவர்கள் துண்டித்து விட்டதாகவும் அது குறித்து மருத்துவர்கள் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை எனக் கூறினார்.

மேலும், இதனால் ஏற்பட்ட பாதிப்பால் தன்னால் உட்கார கூட முடியாத நிலை இருப்பதாகவும், நீண்ட நேரம் படுக்க கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். குறிப்பாக இதனை குணப்படுத்த அறுவை சிகிச்சை செய்ய 10 லட்சத்திற்கு மேல் செலவாகும் என மருத்துவர்கள் தெரிவித்ததாக வேதனை தெரிவிக்கின்றார்.

இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்ட பாதிக்கப்பட்ட ரம்யாவின் உறவினர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இந்த பிரச்னையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மாவட்ட ஆட்சிய அலுவலகத்தில் பரப்பான சூழல் நிலவியது. அதனைத் தொடர்ந்து, ரம்யா மற்றும் அவரது உறவினர்களை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க போலீசார் அழைத்துச் சென்றனர்.

இதையும் படிங்க:"சாலையோர வியாபாரிகள் அனைவரையும் உழவர் சந்தைக்கு மாற்ற வேண்டும்" - உழவர் சந்தை வியாபாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு!

Last Updated : Feb 20, 2024, 3:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details