கரூர்: தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் முடிந்தது. இன்று வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் 54 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் நான்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட உள்ளது.
கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி, திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை சட்டமன்ற தொகுதி, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை சட்டமன்ற தொகுதி, கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம் என ஆறு சட்டமன்ற தொகுதிகளில், 1670 வாக்குச்சாவடிகளுக்கு வாகனங்கள் மூலம், 8000 மின்னணு வாக்கு இயந்திரங்களை போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லும் பணியில் தீவிரவாக ஈடுபட்டு வருகின்றனர்.
கரூர் சட்டமன்ற தொகுதியில் 269 வாக்குச்சாவடி மையங்களில், பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்(EVM Machine) தான்தோன்றிமலை யூனியன் அலுவலகத்திலிருந்து இருந்து, வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒரு வாக்குச்சாவடிக்கு நான்கு வீதம்- 1284 ,VV Pad 348, Control Unit 321, என 1953 இயந்திரங்கள் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.