சென்னை:எண்ணூர் அருகே இயங்கி வரும் கோரமண்டல் தொழிற்சாலையில் இருந்து, கடந்த டிசம்பர் மாதம் திடீரென அமோனியா வாயுக்கசிவு ஏற்பட்டது. வாயுக்கசிவால் தொழிற்சாலைக்கு அருகில் உள்ள பகுதியில் வசித்து வந்த பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல், வாந்தி, மயக்கம், கண் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டன.
இந்த சம்பவம் தொடர்பாக தென் மண்டல தேசியப் பசுமை தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் அமர்வு தாமாக முன்வந்து வழக்கு விசாரணை நடத்தினர். ஏற்கனவே பல முறை விசாரணை நடந்த நிலையில், இன்று (மார்ச் 5) மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில், அரசு சார்பில் அமைக்கப்பட்ட வல்லுநர்கள் குழு, பாதிக்கப்பட்ட இடத்தை ஆய்வு செய்த பின்னர், தொழிற்சாலை உட்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு தர வேண்டும் உள்ளிட்ட 3 முக்கிய விதிகளை வகுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இந்த வல்லுநர்கள் குழு பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று, பல்வேறு தகவல்களை சேகரித்த பின் இந்த அறிவுறுத்தல்களை வகுத்துள்ளது. அதை தொழிற்சாலை பின்பற்றினால், தொழிற்சாலை திறக்க அரசு அனுமதி அளிக்கும் என கூறினார்.