தமிழ்நாடு

tamil nadu

தவறுதலாக தாக்குதல்.. ஆறுதல் தெரிவித்த கிருஷ்ணகிரி கிராமத்தினர்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 9, 2024, 3:58 PM IST

Krishnagiri Migration Workers Attack Issue: கிருஷ்ணகிரியில் குழந்தை கடத்தல் கும்பல் என நினைத்து கிராம மக்களால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களை, தவறான புரிதலால் தாக்கிவிட்டதாகக் கூறி, ஊர் பொதுமக்கள் பழங்கள் கொடுத்து ஆறுதல் தெரிவித்தனர்.

Krishnagiri Migration Workers Attack Issue
குழந்தை கடத்தல் கும்பல் என நினைத்து தாக்கப்பட்ட வடமாநில தொழிலாளர்கள்.. பழங்கள் கொடுத்த ஆறுதல் தெரிவித்த கிராம மக்கள்

கிருஷ்ணகிரியில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம்

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெத்ததாளப்பள்ளி, செம்படமுத்தூர், துறிஞ்சிப்பட்டி, மாதேப்பட்டி ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக குழந்தை கடத்தும் கும்பல் சுற்றித் திரிவதாக வதந்தி பரவி வந்தது. அதற்கு மறுப்பு தெரிவித்த போலீசார், தேவையில்லாத வதந்திகளைப் பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில், கடந்த மார்ச் 6ஆம் தேதி, செம்படமுத்தூர் மற்றும் மாதப்பட்டி பகுதியில் பழைய பொருட்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வட மாநிலத்தைச் சேர்ந்த நபர்களை, குழந்தை கடத்தல் கும்பல் எனக் கருதி, அப்பகுதி பொதுமக்கள் கடுமையாக தாக்கினர். அதில் பலத்த காயமடைந்த 5 வட மாநில நபர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதனையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கராஜ் நடத்திய விசாரணையில், தாக்குதலுக்குள்ளானவர்கள் குழந்தை கடத்தல் கும்பல் இல்லை எனவும், அவர்கள் பழைய பேப்பர் போன்ற பொருட்களை சேகரிப்பவர்கள் எனவும், கடந்த 3 வருடங்களாக கிருஷ்ணகிரி அடுத்த தேவசமுத்திரத்தில் தங்கி, ஆட்டோவில் சென்று குப்பை, மது பாட்டில்களைச் சேகரித்து, அதில் வரும் வருமானம் மூலம் பிழைப்பு நடத்தி வந்தவர்கள் எனவும் தெரிய வந்தது.

அதைத் தொடர்ந்து, குழந்தையைக் கடத்த வந்ததாகக் கூறி வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களைத் தாக்கிய 50 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, 8 பேரை கைது செய்த நிலையில், மீதமுள்ள நபர்களை தேடி வந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

இந்த நிலையில், மாதேப்பட்டி, செம்படமுத்தூர், துறிஞ்சிப்பட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் போலீசார் சார்பில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை அறிவுறுத்தல்படி, துணை கண்காணிப்பாளர் தமிழரசி, தாலுகா காவல் ஆய்வாளர் குலசேகரன் மற்றும் போலீசாருடன் இணைந்து சென்று, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வட மாநிலத் தொழிலாளர்களை நேரில் சந்தித்தனர்.

மேலும், அவர்களுக்கு ஆப்பிள், ஆரஞ்சு உள்ளிட்ட பழங்கள் மற்றும் மருத்துவச் செலவிற்குத் தேவையான நிதியையும் வழங்கி, ஆறுதல் தெரிவித்தனர். மேலும், இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காது எனவும் அவர்களுக்கு உறுதியளித்தனர்.

முன்னதாக, “கிருஷ்ணகிரியில் குழந்தைகள் கடத்தியதாக இதுவரை எந்தப் புகாரும் வரவில்லை. குழந்தை கடத்தப்படுவதாகக் கடந்த சில நாட்களாக வதந்தி பரவி வருகிறது. பொதுமக்கள் அதை நம்ப வேண்டாம், அப்படி யார் மீதாவது சந்தேகம் இருந்தால், உடனடியாக காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும். அதனைத் தவிர்த்து, அவர்கள் மீது தாக்குதல் நடத்தினால், தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய நேரிடும்” என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: தொழுகையில் இருந்த இஸ்லாமியர்களை எட்டி உதைத்த டெல்லி போலீஸ் சஸ்பெண்ட்!

ABOUT THE AUTHOR

...view details