தமிழ்நாடு

tamil nadu

அரசு மருத்துவமனையில் அத்துமீறல்; அந்தரங்களைக் கேட்டு தொந்தரவு செய்ததாக ஊழியர் மீது பெண் புகார்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 11, 2024, 5:18 PM IST

kovilpatti govt hospital Issue: கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்கு வந்த பெண்ணிடம் அந்தரங்களைக் கேட்டு தொந்தரவு கொடுத்த ஊழியர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

அரசு மருத்துவமனையில் அத்துமீறல்; அந்தரங்களைக் கேட்டு தொந்தரவு செய்ததாக ஊழியர் மீது பெண் புகார்

தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகரைச் சேர்ந்தவர் 27 வயது பெண் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்குத் திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இவர் தற்பொழுது கணவரிடம் விவாகரத்து பெற்று, பிரிந்து தனது குழந்தையுடன் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் அவருடைய குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்பதால், அந்த பெண் கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அந்த பெண்ணிற்கும் தோல் தொடர்பான பிரச்சினைகள் இருந்த காரணத்தினால் அரசு மருத்துவமனையில் உள்ள பெண் மருத்துவரிடம் மருத்துவ ஆலோசனை பெற்றுள்ளார். அந்த பெண் மருத்துவரின் ஆலோசனையின் படி இரத்த பரிசோதனை மற்றும் ஹெச்ஐவி பரிசோதனை செய்யச் சென்றுள்ளார்.

ஹெச்வி பரிசோதனை மேற்கொள்வதற்காக மருத்துவமனையில் 12ம் எண் அறையில் பதிவு செய்யச் சென்ற போது, அங்கு பணியில் இருந்த ஸ்டீபன் என்கின்ற ஊழியர், அந்த பெண்ணிடம் தேவையில்லாத கேள்விகளைக் கேட்டது மட்டுமின்றி, அந்தரங்கம் தொடர்பான கேள்விகளைக் கேட்டதாகவும், தவறான எண்ணத்துடன் பார்த்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், தான் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொன்னால் மட்டுமே, பதிவு செய்து தருவேன் என்று நீண்ட நேரம் தர மறுத்துள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் அழுது கொண்டே அறையிலிருந்து வெளியேறிச் சென்று, அதன் பின் இந்த நிகழ்வு தொடர்பாக மருத்துவமனையின் தலைமை மருத்துவர் சுதாவிடம் புகார் தெரிவித்துள்ளார். மேலும் முறையாகப் புகாரும் எழுதிக் கொடுத்துள்ளார்.

புகாரைப் பெற்றுக்கொண்ட தலைமை மருத்துவர், புகாரின் பேரில் மேற்கொண்ட குறித்து தகவல் தெரிவிப்போம் என்று கூறி அனுப்பி விட்டதாகவும், தற்பொழுது வரை எவ்வித விசாரணையோ, நடவடிக்கையோ எடுக்கவில்லை என்றும் பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், “தனக்குள்ள பிரச்சினைகள் குறித்து பெண் மருத்துவரிடம் எடுத்துக்கூறிய பின்னர், தான் சில பரிசோதனைகளைச் செய்ய அறிவுறுத்தினர். மேலும் இது தொடர்பாக மருத்துவமனை சீட்டில் தெளிவாக எழுதி இருந்தார். இருந்த போதிலும் 12ம் அறையில் இருந்த ஸ்டிபன் என்கிற ஊழியர் மீண்டும், மீண்டும் பிரச்சனை குறித்துக் கேட்டுக் கொண்டே இருந்தார். மருத்துவரிடம் கூறிவிட்டேன்.

பதிவு மட்டும் செய்து கொடுங்கள் என்று சொன்னதற்கு அவர் கோபமாகப் பேசியது மட்டுமின்றி, தவறான பார்வையில் பார்த்து, தவறான எண்ணத்துடன் பேசினார். இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை. என்னைப் போன்ற பெண்களுக்கு இங்கு பாதுகாப்பு இல்லை. இந்த ஊழியர் பலரிடமும் இது போன்று தான் நடந்துள்ளதாகவும், முதன் முறையாக, நான் தான் புகார் கொடுத்து இருப்பதாக அங்குள்ள ஊழியர்கள் கூறினர்.

எனவே உரிய விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவரைப் போன்ற நபர்களால் தான் புதுச்சேரி சம்பவம் போன்று நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்தார். இது குறித்து, மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்ட போது, இந்த புகார் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்கு வந்த பெண்ணிடம் அந்தரங்களைக் கேட்டு தொந்தரவு கொடுத்த ஊழியர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:குளத்தில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் உயிரிழப்பு - தூத்துக்குடியில் நேர்ந்த சோகம்

ABOUT THE AUTHOR

...view details