சென்னை:நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்துக்களையும், வரவேற்புகளையும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சென்னை விமான நிலையத்திற்கு வந்த மதிமுக பொது செயலாளர் வைகோ மற்றும் மத்திய அமைச்சர் எல்.முருகன் விஜய் அரசியலுக்கு வந்ததற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
மதிமுக பொது செயலாளர் வைகோ விஜய் குறித்து பேசுகையில், "ஜனநாயகத்தில் வாக்குரிமை எப்படி உறுதிபடுத்தப்பட்டு உள்ளதோ அதுபோல் யாரும் கட்சி ஆரம்பிக்கலாம். விஜயை பின்பற்றி வரக்கூடிய ரசிகர்கள் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். தமிழ்நாட்டிற்கு அவ்வப்போது சில நல்ல காரியங்கள் செய்து உள்ளார்.
இப்போது அரசியல் கட்சி தொடங்கும் முயற்சி எடுக்கிறார். கட்சி தொடங்கும் போது எதுவும் சொல்ல கூடாது. அவரது முயற்சி தமிழ்நாட்டிற்கு நல்லதாக அமையட்டும்" என்றார். அதேபோல், சென்னை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "உலகத்திலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடு இந்தியா. ஜனநாயகத்தின் தாய் இந்தியா.
கட்சி ஆரம்பித்து பொது மக்களுக்கு சேவை செய்ய யார் வேண்டுமானாலும் வரலாம். தமிழகத்தை சேர்ந்த சிறந்த சினிமா நடிகர் விஜய். கட்சி தொடங்கி மக்களுக்கு சிறந்த சேவை செய்ய வேண்டும் என்பதற்காக வந்து இருக்கிறார். இதை வரவேற்று வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.