தமிழ்நாடு

tamil nadu

சென்னை பல்கலையின் வங்கிக் கணக்குகள் விடுவிக்கப்பட்டது.. பேராசியர்கள் போராட்டம் வாபஸ்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 1, 2024, 5:38 PM IST

Madras University Professors Strike: நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி சென்னை பல்கலைக்கழக பேராசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், ஊதியம் விரைவில் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்ற உத்தரவாதத்தை பல்கலைக்கழகப் பதிவாளர் தெரிவித்ததால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

Madras University Professors Strike
வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட சென்னை பல்கலைக்கழக பேராசிரியர்கள்

வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட சென்னை பல்கலைக்கழக பேராசிரியர்கள்

சென்னை: சென்னைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு பிப்ரவரி மாத துவக்கத்தில் கொடுக்க வேண்டிய ஊதியம் இன்னும் வழங்கப்படவில்லை என்றும், கடந்த 20 நாட்களாக சென்னைப் பல்கலைக்கழகத்தின் 37 வங்கிக் கணக்குகள் வருமான வரித்துறையால் முடக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

மேலும், பல்கலைக்கழகத்தின் வருமான வரி கணக்குகள் சரியாக தாக்கல் செய்யப்படவில்லை என்பதால், இந்த நடவடிக்கையை வருமான வரித்துறை எடுத்துள்ளதாகவும், அது குறித்து நோட்டீஸ் அளிக்கப்பட்டும் முறையான பதில்கள் அளிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சென்னைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் மற்றும் அலுவலர் நலச் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் சார்பில், இன்று (மார்ச் 1) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் துவக்கினர். இது குறித்து சென்னை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் கூறும்போது, "சென்னை பல்கலைக்கழகத்திற்கு, தமிழ்நாடு அரசு கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் மானிய நிதியை வழங்கவில்லை.

தணிக்கை அறிக்கையை காரணம் காட்டி, நிதி வழங்காமல் உள்ளது. இதனால் அரசிடம் இருந்து வர வேண்டிய மானியத் தொகையை அளிக்காமல் உள்ளது. தணிக்கையில் உள்ள குறைபாடுகளை காரணம் காட்டி, வருமான வரித்துறையினர் 37 வங்கிக் கணக்குகளையும் முடக்கி உள்ளனர்.

இதனால் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், கவுரவ விரிவுரையாளர்கள் மற்றும் தற்காலிக ஊழியர்கள் என அனைவருக்கும் பிப்ரவரி மாத துவக்கத்தில் வழங்க வேண்டிய ஊதியம் வழங்கப்படவில்லை. சென்னைப் பல்கலைக்கழகத்தின் தணிக்கை துறையின் குறைபாடுகள் கடந்த 5 ஆண்டுகளாக இல்லாத வகையில் செயல்படுத்தி வருகிறோம்.

தணிக்கை துறையால் சுட்டிக் காட்டப்பட்ட ஆட்சேபனைகளுக்கு, மொத்த தொகையில் 10 சதவீதம் அளவிற்கே உள்ளது. இந்தியாவின் தாய் பல்கலைக்கழகத்தின் 167 ஆண்டுகால வரலாற்றில் நிதி இல்லை என்பதற்காக, ஊதியம் வழங்காமல் இருந்தது இல்லை.

தமிழ்நாடு அரசும், பல்கலைக்கழகத்திற்கு வழங்க வேண்டிய மானியத் தொகையை குறைவாகவே வழங்குகிறது. செலவினங்களுக்கான தொகையை வழங்குவதில்லை. சென்னைப் பல்கலைக்கழகத்தில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும்போது, மாணவர்களின் கல்வி பாதிக்கும்.

ஆகவே தமிழ்நாடு அரசு, சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு வழங்க வேண்டிய மானிய நிதித்தொகையை வழங்க வேண்டும். சிறப்பு சிண்டிகேட் கூட்டத்தை நடத்தி பிரச்னையை சுமூகமாக தீர்க்க வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக ஓய்வு பெறுபவர்களுக்கு ஓய்வூதியப் பலன்கள் வழங்கப்படாமல் உள்ளது, அதற்கும் தீர்வுகாண வேண்டும்" என கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில், வருமானவரித் துறையால் முடக்கப்பட்ட சென்னைப் பல்கலைக்கழகத்தின் 37 வங்கிக் கணக்குகளும் மீண்டும் விடுவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான ஊதியம் விரைவில் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என்ற உத்தரவாதத்தை சென்னை பல்கலைக்கழகப் பதிவாளர் ஏழுமலை, போராட்டம் நடத்தி வரும் பேராசிரியர்கள் இடையே தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, சென்னைப் பல்கலைக்கழகத்தில் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

இதையும் படிங்க:கள்ளக்குறிச்சி அதிமுக முன்னாள் எம்எல்ஏ பிரபு வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை!

ABOUT THE AUTHOR

...view details