தமிழ்நாடு

tamil nadu

கோடநாடு வழக்கில் ஈபிஎஸ் பற்றி கருத்து தெரிவிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க உதயநிதி மனு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 23, 2024, 12:09 PM IST

Updated : Jan 23, 2024, 9:08 PM IST

Madras High Court: கோடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமி பற்றி கருத்து தெரிவிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவுக்கு விளக்கமளிக்க எடப்பாடி பழனிசாமி தரப்பில் அவகாசம் கோரப்பட்டதை ஏற்று, வழக்கின் விசாரணை பிப்.26ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

கோடநாடு வழக்கில் ஈபிஎஸ் பற்றி கருத்து தெரிவிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க உதயநிதி மனுt
கோடநாடு வழக்கில் ஈபிஎஸ் பற்றி கருத்து தெரிவிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க உதயநிதி மனு

சென்னை: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி வெளியிட்டிருந்த அறிக்கையில், சனாதனம் குறித்த புரிதல், கோடநாடு கொலை கொள்ளை வழக்கின் நிலைப்பாடு, ஆளுநருடன் நட்பு ஆகியவற்றைக் குறிப்பிட்டு, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருத்தை வெளியிட்டிருந்தார்.

இதனை அடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி, தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், அவதூறு பரப்பும் வகையிலும் உதயநிதி அறிக்கையில் கூறியுள்ளதாக, 1 கோடியே 10 லட்சம் ரூபாய் மான நஷ்ட ஈடு கோரியும், தன்னைப் பற்றி பேச அமைச்சர் உதயநிதிக்கு தடை விதிக்க வேண்டுமெனவும் மனு அளித்துள்ளார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி கருத்து தெரிவிக்க உதயநிதி ஸ்டாலினுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் மட்டுமே அறிக்கை வெளியிட்டதாக கூறியுள்ளார். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமியை தங்கள் தரப்பு சாட்சியாக விசாரிக்க வேண்டும் என குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

அதனால் இந்த வழக்குக்கும், தனக்கும் சம்பந்தமில்லை என எடப்பாடி பழனிசாமி கூற முடியாது என்று குறிப்பிட்டு உள்ளார். கோடநாடு சம்பவம் நடந்தபோது எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தார் என்பதால், பொது ஊழியராக அவரது செயல்பாடு குறித்து பொதுநலன் அடிப்படையில் அறிக்கை வெளியிட்டதாகக் கூறியுள்ள உதயநிதி ஸ்டாலின், தனக்கு எதிராக விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என பதில் மனுவில் கோரியிருக்கிறார்.

உதயநிதி ஸ்டாலினின் பதில் மனுவுக்கு விளக்கமளிக்க எடப்பாடி பழனிசாமி தரப்பில் அவகாசம் கோரப்பட்டதை ஏற்று, வழக்கின் விசாரணையை பிப்ரவரி 26ஆம் தேதிக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் தள்ளி வைத்தார்.

இதையும் படிங்க:அதிமுக கொடி, சின்னம் பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு தடை விதிக்க கோரி இபிஎஸ் தொடர்ந்த வழக்கு ஒத்திவைப்பு!

Last Updated :Jan 23, 2024, 9:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details