தமிழ்நாடு

tamil nadu

போதை மாத்திரை என தூக்க மாத்திரை விற்பனை செய்த இருவர் கைது.. பிடிபட்டது எப்படி? - Chennai Drug cases today

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 11, 2024, 7:01 PM IST

Online fraud: சென்னை திருமங்கலத்தில் ஆன்லைனில் போதை மாத்திரை விற்பனை செய்வதாக ஏமாற்றி பணம் பறித்த மதுரையைச் சேர்ந்த 2 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதை மாத்திரை விவகாரத்தில் பிடிபட்ட இருவரின் புகைப்படம்
போதை மாத்திரை விவகாரத்தில் பிடிபட்ட இருவரின் புகைப்படம் (Credit: ETV Bharat Tamil Nadu)

சென்னை:சென்னை அண்ணாநகர், திருமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆன்லைனில் போதை மாத்திரைகள் விற்பனை செய்வதாக திருமங்கலம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில், திருமங்கலம் காவல்துறையினர் நேற்று (மே 10) இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர்.

அப்போது அண்ணா நகரில் உள்ள 2வது அவன்யூ சாலையில், சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த இரண்டு பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆனால், இருவரும் முன்னுக்குப் பின் முரணான தகவலை தெரிவித்ததால், காவல் துறையினர் சந்தேகம் அடைந்து அவர்களை சோதனை செய்துள்ளனர்.

தொடர்ந்து அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில், போதைப்பொருட்கள் கேட்கும் நபர்களிடம் பல விதமான போதைப்பொருட்கள் இருப்பதாக பணம் பறித்து மோசடி செய்வதும், இணையதளம் மூலமாக போதைப்பொருட்களுக்கான பணத்தை பெற்றுக்கொண்டு, அதற்கு பதிலாக தூக்கமின்மைக்காக பயன்படுத்தப்படும் மாத்திரையை அவர்கள் விற்பனை செய்ததும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, மோசடியில் ஈடுபட்ட மதுரையைச் சேர்ந்த சங்கர் கணேஷ் மற்றும் எழில் கிருஷ்ணன் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதேபோல், சென்னை வியாசர்பாடி எம்.கே.பி நகரில் போதை ஊசி போட்டு இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில், சிறுவன் உள்ளிட்ட மூன்று பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை வியாசர்பாடி எம்.கே.பி நகரில் உள்ள காந்தி தெருவில் வசித்து வருபவர் ரவிச்சந்திரன். இவருக்கு சத்யநாராயணன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில், சத்யநாராயணன் கஞ்சா மற்றும் போதை ஊசிக்கு அடிமையாகி இருந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று (மே 10) சத்யநாராயணன் போதை ஊசியை உபயோகப்படுத்தியதால் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக எம்.கே.பி நகர் காவல் துறையினர்,தற்கொலை செய்து கொண்டதாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக வியாசர்பாடியைச் சேர்ந்த முகமது மஜீத், பாஷா மற்றும் 17 வயது சிறுவன் உட்பட மூன்று பேரை எம்.கே.பி நகர் காவல் துறையினர் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், சத்யநாராயணனுக்கு இந்த மூவரும் போதைப் பொருட்கள் வழங்கியது தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க:ரிஷப் பன்ட் ஒரு போட்டியில் விளையாட தடை- ஐபிஎல் நிர்வாகம் உத்தரவு! என்ன காரணம்? - Rishabh Pant Suspend

ABOUT THE AUTHOR

...view details