தமிழ்நாடு

tamil nadu

கூட்டணி குறித்து கேள்விபட்டது உண்மைதான்.. டிடிவி தினகரன் திட்டவட்டம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 1, 2024, 3:06 PM IST

TTV Dhinakaran: மயிலாடுதுறை அமிர்தகடேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வந்த அமமுக தலைவர் டிடிவி தினகரன், நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி மற்றும் சின்னம் குறித்த கேள்விக்கு, ஓபிஎஸ் உடன்தான் தொடர்ந்து செயல்படுவேன், தேர்தலில் போட்டியிட எங்களுக்கு குக்கர் சின்னம் உள்ளது என தெரிவித்தார்.

TTV Dhinakaran
டிடிவி‌ தினகரன்

சின்னம் குறித்த சர்ச்சைக்கு டிடிவி தினகரன் முற்றுப்புள்ளி

மயிலாடுதுறை: தரங்கம்பாடி தாலுகா, திருக்கடையூரில் உள்ள தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான புகழ்பெற்ற ஸ்ரீ அபிராமி சமேத ஶ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இது பல்வேறு புராண நிகழ்வுகளை உள்ளடக்கிய திருத்தலமாகவும் விளங்குகிறது.

இங்கு ஆயுள் ஹோமம் மற்றும் 60 வயது தொடங்குபவர்கள் உக்கிர ரத சாந்தி, 60 வயது பூர்த்தி அடைந்தவர்கள் சஷ்டியப்த பூர்த்தி, 70 வயதில் பீமரத சாந்தி, 80 வயது பூர்த்தி அடைந்தவர்கள் சதாபிஷேகம், 90 வயது அடைந்தவர்கள் கனகாபிஷேகம், 100 வயது பூர்த்தி அடைந்தவர்கள் பூர்ணாபிஷேகம் செய்து சுவாமி, அம்பாளை வழிபட்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த திருக்கடையூர் கோயிலுக்கு, இன்று காலை அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், 60வது வயது பூர்த்தியடைந்ததை அடுத்து, அவரது மனைவி அனுராதாவுடன் வந்திருந்தார். அப்போது கோயில் நிர்வாகம் சார்பில், டிடிவி தினகரனுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கோபூஜை, கஜ பூஜை செய்த பின்னர், கோயிலுக்குள் சென்று, கள்ள வர்ண விநாயகர், ஸ்ரீ காலசம்கார மூர்த்தி, ஶ்ரீ அமிர்தகடேஸ்வரர் மற்றும் அபிராமி அம்மன் சன்னதியில் சிறப்பு அர்ச்சனை செய்து வழிபாடு செய்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன், “தனக்கு 60 வயது பூர்த்தியடைந்ததை அடுத்து, அமிர்தகடேஸ்வரர் அபிராமி அம்பாளின் அனுக்கிரகத்தை பெறுவதற்காக வந்துள்ளோம். ஏற்கனவே எங்களுக்கு குக்கர் சின்னம் உள்ளது. வதந்திகள், பொய் செய்திகள் மற்றும் யூகங்களை வைத்து எதையும் கேட்காதீர்கள். இன்னும் கொஞ்சம் நாள் பொறுத்திருங்கள், உங்களது கேள்விகளுக்கு உறுதியான விடை கிடைக்கும்.

மேலும் நானும், ஓபிஎஸ்-ம் வருங்காலத்தில் அரசியலில் இணைந்து செயல்படுவோம் என ஏற்கனவே முடிவு எடுத்துள்ளோம். கூட்டணிக்காக சில கட்சிகளுடன் பேசிக் கொண்டிருப்பது உண்மை. ஆகையால், கூட்டணி குறித்த இறுதி வடிவம் எட்டிய பிறகு உங்களிடம் கூறுகிறோம்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் இன்று முதல் மாணவர்கள் சேர்க்கை!

ABOUT THE AUTHOR

...view details