திருச்சி:வடமாநில தொழிலாளர்கள் குழந்தைகளைக் கடத்துவதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல் உண்மை இல்லை எனவும் தமிழகத்தில் லட்சக்கணக்கான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பணி செய்து வருவதால், பொதுமக்கள் சந்தேகத்தின் பேரில் யார் மீதும் தாக்குதல் நடத்தக் கூடாது என்றும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி வருண் குமார், "குழந்தை கடத்தல் தொடர்பான வதந்திகள் சமூக வலைத்தளங்களில் அதிகளவு பரவி வருகிறது. மேலும், வடமாநில தொழிலாளர்கள் குழந்தைகளைக் கடத்துவதாக வீடியோ மற்றும் ஆடியோ வாட்ஸ் ஆப்பில் பரவி வருவதைக் காண முடிகிறது. இது முற்றிலும் வதந்தியே. தமிழகத்தில் அத்தகைய சூழல் ஏதும் இல்லை.
தமிழகம் முழுவதும் 10 லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளனர். எல்லா இடங்களிலும் வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். இதேபோல், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் திருச்சியிலும் அதிக அளவில் உள்ளனர். அவர்களைக் குழந்தைக் கடத்தலில் ஈடுபடுபவர்கள் எனத் தவறாக எண்ணி, பொதுமக்கள் அவர்கள் மீது தாக்குதல் நடத்திவிடக் கூடாது.
வதந்திகளை நம்பி சிலர் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதில், ஒருவர் உயிரிழந்துள்ளார். தற்போது தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்களுக்கு யார் மீதாவது சந்தேகம் ஏற்பட்டால் உடனே தாக்குதலில் ஈடுபடாமல், முதலில் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதன் பேரில், உண்மை என்ன என்பதை ஆராய்ந்து காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பார்கள்.