தமிழ்நாடு

tamil nadu

வெடிகுண்டு மிரட்டல் விவகாரம்: இன்டர்போல் உதவியை நாடிய தமிழ்நாடு காவல்துறை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 13, 2024, 8:03 AM IST

Bomb threat to schools in Chennai: சென்னையில் உள்ள தனியார் பள்ளிகள் மற்றும் கோயில்களுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட விவகாரத்தில், ஐரோப்பிய நாட்டின் எம் லாட் என்கிற பரஸ்பர ஒப்பந்தம் அடிப்படையில் இன்டர்போல் உதவியை போலீசார் நாடியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

bomb threat to schools in Chennai
சென்னை வெடிகுண்டு மிரட்டல் விவகாரம்

சென்னை: சென்னையில் பிப்ரவரி 8ஆம் தேதி 13 தனியார் பள்ளிகளுக்கு இ-மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி எனத் தெரிய வந்த நிலையில், அந்த இ-மெயில் ஐடி குறித்த விவரங்களைச் சேகரிக்கும் பணியில் சென்னை போலீசார் தீவிரம் காட்டினர். அதாவது பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும், கோயில்களுக்கும் இதேபோன்ற இ-மெயில் மிரட்டல் தொடர்ந்து வந்தது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரின் இ-மெயில் ஐடி புரோட்டான் எனப்படும் நிறுவனத்தின் இ-மெயில் ஐடி மூலமாக ஒரே நபர்தான் விடுத்திருக்கலாம் என போலீசார் விசாரணையில் கண்டுபிடித்தனர்.

குறிப்பாக, சுவிட்சர்லாந்து நாட்டின் புரோட்டான் நிறுவன இ-மெயில் மூலம் விபிஎன்யை (VPN) பயன்படுத்தி இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. விபிஎன் பயன்படுத்தப்பட்டதால், வெடிகுண்டு விவகாரத்தில் குற்றவாளியைப் பிடிப்பது போலீசாருக்கு சற்று சவாலாக இருந்து வருகிறது.

அதையடுத்து, இன்டெர்போல் (INTERPOL) மூலமாக மிரட்டல் வந்த இ-மெயில் ஐடியின் ஐபி முகவரி (Email ID IP Address), மிரட்டல் விடுத்த நபரின் விவரங்கள் கேட்டுச் சம்பந்தப்பட்ட சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த புரோட்டான் நிறுவனத்திற்குக் கடிதம் அனுப்பியது. ஆனால், இந்த கடிதத்திற்கு எந்த பதிலும் சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்து வரவில்லை எனக் கூறப்பட்டது.

தொடர்ந்து, இந்நிறுவனத்தின் இ-மெயிலை இந்தியாவில் முடக்கக் கோரி, சென்னை போலீசார் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் ஒன்று அனுப்பியதாகவும், பின்னர் மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் மூலம் புரோட்டான் நிறுவனத்திற்கும் இ-மெயில் ஐடி கேட்டு கடிதம் அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

முதலில் ஐபி முகவரியை தரமறுத்த புரோட்டான் நிறுவனம், மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் அனுப்பிய கடிதத்திற்குப் பிறகு ஐபி முகவரியை சென்னை போலீசாருக்கு அனுப்பியுள்ளது. விபிஎன் மூலம் குற்றவாளி பயன்படுத்திய ஐபி முகவரி ஐரோப்பிய நாட்டின் பல்வேறு பகுதியின் முகவரியை காண்பிப்பதால், அந்த நாட்டில் இருந்தும் ஐபி முகவரியைப் பெற்று குற்றவாளியைத் தேடிவருவதாக மத்திய குற்றப்பிரிவு சைபர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், விபிஎன் மூலமாக பயன்படுத்திய அந்த குறிப்பிட்ட மெயில் ஐடியை மர்ம நபர் டெலிட் (Delete) செய்து இருக்கலாம் எனவும் போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர். ஐரோப்பிய நாட்டின் முகவரிகள் காட்டுவதால் எம் லாட் என்கிற பரஸ்பர ஒப்பந்தம் அடிப்படையில் ஐபி முகவரி தகவல் பெற சென்னை போலீசார் இன்டர்போல் உதவியை நாடியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: சென்னை - மைசூரு இடையே மேலும் ஒரு வந்தே பாரத் ரயில்.. புறப்படும் நேரம், நிறுத்தங்கள் விவரம்!

ABOUT THE AUTHOR

...view details