தமிழ்நாடு

tamil nadu

உலக முதலீட்டாளர் மாநாடு 2024; டிஆர்பி ராஜா தலைமையில் 17 பேர் கொண்ட சிறப்புக் குழு அமைப்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 29, 2024, 4:29 PM IST

Tamil Nadu Global Investors Meet 2024: உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஒப்பந்தம் செய்த நிறுவனங்கள் தொழில் துவங்குவதைக் கண்காணிக்க, தமிழ்நாடு அரசுத் தரப்பில் சிறப்புக் குழு அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.

tn-govt-order-to-set-up-a-special-committee-to-implement-agreements-held-at-tn-global-investor-meet
உலக முதலீட்டாளர் மாநாட்டில் நடைபெற்ற ஒப்பந்தங்களைச் செயல்படுத்தச் சிறப்புக் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு..

சென்னை: தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்க்க, தமிழ்நாடு அரசு சார்பில், சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், கடந்த ஜனவரி 7 மற்றும் 8ஆம் தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் 632 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வாயிலாக 6.64 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டது.

ஏற்கனவே, 2015 மற்றும் 2019 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த நிறுவனங்களிடமிருந்து 50 சதவீதம் கூட முதலீடுகள் வராத நிலையில், சமீபத்தில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புரிந்துணர்வு ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்த அமைச்சர் டிஆர்பி ராஜா தலைமையில் சிறப்புக் குழு அமைக்கப்படும் என்றும், ஒவ்வொரு ஒப்பந்தமும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, முழுத் தொழில் வடிவம் பெறும் முயற்சிகள் எடுக்கப்படும் என்றும் அறிவித்தார்.

இந்த நிலையில், தற்போது தொழில் தொடங்குவதைக் கண்காணிக்க, தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தலைமையில் சிறப்புக் குழுவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த சிறப்புக் குழுவில் தலைமைச் செயலாளர், தொழில்துறைச் செயலாளர், மின்வாரியத் தலைவர், தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் உள்பட 17 பேர் இடம் பெற்றுள்ளனர்.

முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஒப்பந்தம் செய்த நிறுவனங்களுடன் தொடர்ந்து கூட்டங்களை நடத்தி, தேவைகளைக் கேட்டறிந்து, தொழில் துவங்க இக்குழு நடவடிக்கை எடுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:வைகை எக்ஸ்பிரஸ் உள்பட 53 ரயில்கள் கூடுதல் ரயில் நிலையங்களில் நிறுத்தம் - தெற்கு ரயில்வே!

ABOUT THE AUTHOR

...view details