சென்னை:சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த ஆண்டு செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இதனிடையே, அவர் இலாகா இல்லாத அமைச்சராக நீடித்தார். இந்த நிலையில், நேற்று தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து, அது தொடர்பான ராஜினாமா கடிதத்தை முதலமைச்சருக்கு அனுப்பினார்.
இதனையடுத்து, அவரது ராஜினாமா தொடர்பான கடிதம் ஆளுநருக்கு முதலமைச்சரால் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில், செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததற்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கி உள்ளதாக ஆளுநர் மாளிகை தரப்பில் வெளியான செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக, தமிழ்நாடு அரசின் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. முந்தைய ஆட்சியில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சட்டவிரோத் செயலில் ஈடுபட்டதாக, இவருக்கு சொந்தமான அரசு பங்களா வீடு, அலுவலகங்கள் மற்றும் கரூரில் நான்கு இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஜூன் 14ஆம் தேதி 18 மணி நேரமாக சோதனை நடத்தினர்.
அதன்பின், சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையால் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். பின்னர் தொடர்ந்து விசாரணை நடத்தி நீதிமன்றக் காவலில் அவரை அடைத்தனர். தற்போது புழல் சிறையில் நீதிமன்றக் காவலில் உள்ளார்.