தமிழ்நாடு

tamil nadu

திருச்செந்தூர் மாசி திருவிழா வரும் பிப்.14ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 12, 2024, 12:52 PM IST

Thiruchendur Masi Festival: திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், மாசித் திருவிழா வரும் பிப்.14ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் பிப்.23ஆம் தேதி நடக்கிறது.

Thiruchendur murugan temple
திருச்செந்தூர் முருகன் கோயில் மாசித் திருவிழா

தூத்துக்குடி: முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் வருந்தோறும் பல திருவிழாக்கள் நடைபெறும். அதில் மாசித் திருவிழா மிக முக்கிய திருவிழாவாகக் கருதப்படுகிறது. 2ஆம் படை வீட்டில் மட்டும் தான் ஆவணித் திருவிழா மாசித் திருவிழா என 2 பிரம்மோற்சவம் நடைபெறுகிறது, மற்ற முருகன் கோயில்களில் ஆண்டுக்கு ஒரு பிரம்மோற்சவம் மட்டுமே நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

சுமார் 12 நாட்கள் நடைபெறும் இந்த மாசித் திருவிழாவில், பெரிய தேரில் சுவாமியும், தெய்வானையும் வலம் வருவதைக் காண ஏராளாமான பக்தர்கள் கலந்து கொள்வர். திருவிழா துவங்கிய அந்த 12 நாட்களும் திருச்செந்தூர் முருகன் கோயில் விழாக் கோலம் பூண்டு, களைகட்டிக் காணப்படும்.

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், புகழ்மிக்க மாசித் திருவிழாவையொட்டி, பிப்ரவரி 14ஆம் தேதி புதன்கிழமை அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம் நடைபெறும். பின்னர் 4.30 மணிக்கு கோயில் செப்பு கொடிமரத்தில் திருவிழா கொடியேற்றப்பட்டு, சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடைபெறும்.

முக்கிய நிகழ்ச்சியாக 5ஆம் திருநாளான பிப்ரவரி 18, மேலக்கோயிலில் (சிவன் கோயில்) இரவு 7.30 மணிக்கு குடவருவாயில் தீபாராதனையும், பிப்.20 அதிகாலை 4.30 மணிக்கு சண்முகபெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சியும், அதனைத் தொடா்ந்து 8.45 மணிக்கு ஆறுமுகப்பெருமான் வெட்டி வோ் சப்பரத்தில் பக்த பெருமக்களுக்கு ஏற்ற தரிசனம் அருளி பிள்ளையன்கட்டளை மண்டபத்தை வந்து சோ்கிறாா்.

அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்று, மாலை 4.30 மணிக்கு சுவாமி சிவன் அம்சத்தில் தங்க சப்பரத்தின் மீது சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தா்களுக்கு காட்சியளிக்கிறாா்.

பின்னர் வரும் பிப்ரவரி 21ஆம் தேதி காலை பிரம்மா, அம்சத்தில் பெரிய வெள்ளிச்சப்பரத்தில் வெள்ளைச் சாத்தி கோலத்தில் எழுந்தருளி, வீதிவுலா நடைபெறும், அதனைத் தொடர்ந்து மேலக்கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாராதனை நடைபெறும். பின்னர் முற்பகல் 11 மணிக்கு சுவாமி விஷ்ணு அம்சத்தில் பச்சைக் கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி எழுந்தருளி, வீதி உலா வந்து திருக்கோயில் சோ்கிறாா்.

வரும் பிப்ரவரி 22ஆம் தேதி, சுவாமி தங்க கயிலாய பா்வத வாகனத்திலும், அம்மன் வெள்ளிக் கமல வாகனத்திலும் எழுந்தருள்கின்றனா். தொடர்ந்து, 10ஆம் திருநாளான பிப்.23ஆம் தேதி சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது. காலை 6.30 மணிக்கு விநாயகா், சுவாமி, அம்பாள் தனித்தனி தோ்களில் ரதவீதியில் வலம் வந்து அருள் பாலிக்கின்றனா். பின்னர் பிப்.24ஆம் தேதி இரவு தெப்பத் திருவிழாவும், மறுநாள் 12ஆம் திருநாளுடன் விழா இனிதே நிறைவு பெறுகிறது. திருவிழாவின் ஏற்பாடுகளை கோயில் பணியாளா்கள் தீவிரமாக செய்து வருகின்றனா்.

இதையும் படிங்க: திமுக கூட்டணியில் மதிமுக கேட்டுள்ள சீட்கள் எத்தனை? - துரை வைகோ தகவல்

ABOUT THE AUTHOR

...view details