தமிழ்நாடு

tamil nadu

புத்தகம் பார்த்து தேர்வு எழுத வாய்ப்பு இல்லை.. அமைச்சர் அன்பில் மகேஷ்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 6, 2024, 7:48 PM IST

Updated : Mar 6, 2024, 7:59 PM IST

Minister Anbil Mahesh: மாநிலப் பள்ளிகளில் புத்தகத்தை பார்த்து தேர்வை எழுத வைக்கும் நடைமுறை செயல்படுத்தப்பட மாட்டாது என திருச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் அன்பில் மகேஷ்
அமைச்சர் அன்பில் மகேஷ்

அமைச்சர் அன்பில் மகேஷ்

திருச்சி:திருச்சியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் சிறந்த பள்ளிகளுக்கு அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது, பேராசிரியர் அன்பழகன் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு கல்வி, விளையாட்டு, மாணவர் மேம்பாடு, பள்ளி கட்டமைப்பு, பள்ளி மேலாண்மைக் குழுவின் செயல்பாடு, இல்லம் தேடி கல்வி உள்ளிட்ட அரசின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திய பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருதினை வழங்கினார்.

இந்த விழாவில் சான்றிதழ், கேடயம் மற்றும் ரூ.10 லட்சத்திற்கான காசோலை, மேலும் கற்பித்தல், ஆசிரியர் திறன், தலைமைத்துவம், மாணவர்களின் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சியினை குறிக்கோளோடு செயல்பட்ட 76 பள்ளிகளுக்கு பேராசிரியர் அன்பழகன் விருது வழங்கி கௌரவித்தார்.

இந்நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பெயரில், முதன் முறையாக அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருதும் மற்றும் சிறந்த முறையில் செயலாற்றி வரும் பள்ளிகளுக்கான பேராசிரியர் அன்பழகன் விருதும் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 100 பள்ளிகளுக்கு, தலா 10 லட்சம் ரூபாய் நிதியை வழங்கியுள்ளோம். பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெற்று வருகிறது. மற்ற வகுப்புகளுக்கான தேர்வுகளும் திட்டமிட்டபடி நடைபெறும்” என்றார்.

மேலும், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் மாணவர்களுக்கு புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதும் முறை கொண்டுவரப்பட்ட நிலையில் தமிழகத்தில் எப்போது வரும் என கேள்வி எழுப்பிய நிலையில், “தமிழ்நாடு மாநில பள்ளிகளில் புத்தகத்தைப் பார்த்து தேர்வை எழுத வைக்கும் நடைமுறை செயல்படுத்தப்பட மாட்டாது” என தெரிவித்தார்.

மேலும், இந்த நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கலந்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் என திரளாக கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:'நீங்கள் நலமா' திட்டம்; 'நாங்கள் நலமா இல்லை' என பதிவிட்ட எடப்பாடியை கடுமையாக சாடிய டிஆர்பி ராஜா!

Last Updated : Mar 6, 2024, 7:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details