தமிழ்நாடு

tamil nadu

சென்னைக்கு இனி ஜில் தான்.. வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய தகவல்! - TN Weather report

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 10, 2024, 4:24 PM IST

TN Weather report: தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களில் வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் – 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களில் வெப்பநிலை படிப்படியாக குறையக்கூடும்

சென்னை:தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் இன்று (ஏப்.10)தமிழகத்தில், ஒருசில இடங்களில் 2 – 4 டிகிரி செல்சியஸ் குறைவாக இருந்தது. அதே போல் இதர தமிழக பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் ஏதுமில்லை.

இது குறித்து மேலும் வானிலை ஆய்வு மையம் கூறுகையில், “தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகள் மற்றும் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை விட 2 – 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது. அதிக பட்ச வெப்பநிலையாக திருப்பத்தூரில் 41.6 டிகிரி செல்சியஸ் மற்றும் ஈரோட்டில் 40.0 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

இதர தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில், 37 – 39 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. தமிழக கடலோரப்பகுதிகளில் 33 – 37 டிகிரி செல்சியஸும், புதுவையில் 34.5 டிகிரி செல்சியஸும், காரைக்கால் பகுதியில் 33.6 டிகிரி செல்சியஸும் மற்றும் மலைப்பகுதிகளில் 22 – 30 டிகிரி செல்சியஸும் பதிவாகியுள்ளது. அதே போல் சென்னை மீனம்பாக்கத்தில் 35.1 டிகிரி செல்சியஸ் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 34.5 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை:தென் இந்தியப்பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக ஏப்.10 ம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதை தொடர்ந்து ஏப்.11 ம் தேதி தென் தமிழகம், டெல்டா மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில், ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

அதே போல் ஏப்.12 ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தொடர்ந்து ஏப்.13 மற்றும் ஏப்.14 ம் தேதிகளில் தென் தமிழகம், டெல்டா மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

இதையடுத்து ஏப்.15 ம் தேதி தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதே போல் ஏப்.16 ம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

அடுத்த சில தினங்களுக்கான வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:ஏப்.10 முதல் ஏப்.14 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் வெப்பநிலை 2 – 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும். மேலும் ஏப்.10 மற்றும் ஏப்.11 ஆகிய தேதிகளில், தமிழகத்தில் ஒருசில இடங்களில் 2 – 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.

தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் 37 – 40 டிகிரி செல்சியஸ் மற்றும் கடலோரப்பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் 33 – 37 டிகிரி செல்சியஸ் இருக்கக்கூடும். தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஏப்.10 மற்றும் ஏப்.11 ஆகிய அடுத்த இரண்டு தினங்களுக்கு, காற்றின் ஈரப்பதம் பிற்பகலில் 30 - 50 % ஆகவும், மற்ற நேரங்களில் 40-70 % ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-80 % ஆகவும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் போது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்” என கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மதுரை அருகே நிகழ்ந்த விபத்தில் 6 பேர் பலி.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி! - Madurai Accident

ABOUT THE AUTHOR

...view details