தமிழ்நாடு

tamil nadu

ராமேஸ்வரம் குண்டுவெடிப்பு குறித்து மத்திய இணையமைச்சர் சர்ச்சை கருத்து; ஸ்டாலின், ஈபிஎஸ் உள்பட தமிழக அரசியல் பிரமுகர்கள் கண்டனம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 19, 2024, 10:15 PM IST

Shobha Karandlaje about Tamilans: ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு குறித்த மத்திய வேளாண் இணை அமைச்சர் ஷோபா கரந்த்லாஜேவின் கருத்துக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தமிழக அரசியல் தலைவர்கள் தங்களது 'X' வலைத்தளப் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

சென்னை:கர்நாடக மாநிலம் பெங்களூருவில் செயல்பட்டு வரும் ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில், மார்ச் 1ஆம் தேதி குண்டுவெடிப்பு சம்பவம் நடத்தது. இதில் உணவக பணியாளர்கள் 2 பேர் உள்பட 10 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக, தேசிய புலனாய்வு முகமை விசாரணையைத் தொடந்து மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த எட்டு நாள்களுக்குப் பிறகு ராமேஸ்வரம் கஃபே, மார்ச் 9ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக மத்திய வேளாண் இணை அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே சமிபத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், "பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் தமிழ்நாட்டில் இருந்து வந்தவர்களால்தான் நடைபெற்றது. தமிழ்நாட்டில் இருந்து வருபவர்கள் வெடிகுண்டு தயாரிக்க பயிற்சி எடுத்து உணவகத்தில் குண்டு வைத்ததாகவும்" கூறியுள்ளார்.

மத்திய இணை அமைச்சர் ஷோபாவின் இந்த கருத்து, பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மேலும், சமூக வலைத்தளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருவதோடு, நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில் ஷோபா கரந்த்லாஜே முன்வைத்துள்ள இந்த கருத்து தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளரும்,, சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் தங்களது 'X' வலைத்தளப் பக்கத்தில், மத்திய இணை அமைச்சர் ஷோபாவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மு.க.ஸ்டாலின் கண்டனம்:"பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு வழக்கில் தமிழர்களைத் தொடர்புபடுத்தியுள்ள ஒன்றிய பாஜக இணையமைச்சர் ஷோபா கரந்த்லஜேவின் பொறுப்பற்ற பேச்சுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு பேசுவதற்கு அவர் என்ஐஏ அதிகாரியாக இருக்க வேண்டும் அல்லது இந்த குண்டுவெடிப்பு நிகழ்வுடன் நெருங்கிய தொடர்புடையவராக இருக்க வேண்டும்.

கண்டிப்பாக இப்படி பேச அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை. தமிழர்களோடு, கன்னடர்களும் பாஜகவின் இந்த பிளவுவாதப் பேச்சை நிராகரிப்பார்கள். நாட்டின் அமைதி, நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமைக்கு குந்தகம் விளைவித்ததற்காக ஷோபா மீது தக்க சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோருகிறேன்.

பிரதமரில் இருந்து தொண்டர்கள் வரை பா.ஜ.கவில் இருக்கும் அனைவரும் இத்தகைய, பிரிவினை அரசியலை உடனே நிறுத்த வேண்டும். தேர்தல் ஆணையம் ஷோபாவின் வெறுப்புப் பேச்சைக் கவனித்து, அவர் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி:"தமிழ்நாட்டு மக்களை பொதுப்படையாக பயங்கரவாதிகள் போல சித்தரிக்கும் பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜேவின் வெறுப்புப் பேச்சுக்கு என்னுடைய கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற பிரிவினைவாதப் பேச்சுக்களை இனியும் யாரும் பேசாத வண்ணம் இந்திய தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று கூறியுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின்:"மத்திய அமைச்சர் ஷோபாவின் விஷமத்தனமான அறிக்கையை வன்மையாக கண்டிக்கிறேன். ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கை என்ஐஏ விசாரித்து வரும்போது, பாஜக அமைச்சர் எப்படி இவ்வளவு அபத்தமான கருத்தை தெரிவித்தார் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

பாஜகவின் இழிவான பிரித்தாளும் அரசியல் மற்றும் பாஜகவின் இழிவான கூற்றுகளை தமிழர்களும், கன்னட சகோதர சகோதரிகளும் நிராகரிப்பார்கள் என்று நான் நம்புகிறேன். என்ஐஏ அவரை விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நமது மகத்தான தேசத்தின் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை அச்சுறுத்தும் வெறுப்புப் பேச்சுக்காக அவருக்கு எதிராக இந்திய தேர்தல் ஆணையம் (ECI) செயல்பட வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:சேலம் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் - டி.ஆர்.பாலு பதிலடி!

ABOUT THE AUTHOR

...view details