தமிழ்நாடு

tamil nadu

"மனைவியை கூட கவனிக்காத ஒருவர் ராமர் சிலையை பிரதிஷ்டை செய்வது தவறு" - கே. எஸ்.அழகிரி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 23, 2024, 4:14 PM IST

Tamilnadu Congress President K.S.Alagiri: ராமர் கோயிலுக்கு யாரும் எதிராக இல்லை, அமைதியாகவும் நடைபெற வேண்டிய கும்பாபிஷேகம் பதற்றத்துடன் நடந்துள்ளது என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.

KS Alagiri
கே எஸ் அழகிரி

கே. எஸ்.அழகிரி பேட்டி

தஞ்சாவூர்:கும்பகோணம் அருகே தத்துவாஞ்சேரியில் முன்னாள் எம்.எல்.ஏ.ராமாமிர்த தொண்டைமான் சிலையை இன்று (ஜனவரி 23) முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் முன்னிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் எம்பி-க்கள், எம்எல்ஏ-க்கள் மற்றும் திமுக காங்கிரஸ் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பொது மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதனையடுத்து, கே.எஸ்.அழகிரி பேசியதாவது "அயோத்தியில் 3,200 ராமர் கோயில்கள் உள்ளது. இதில் மோடி நேற்று (ஜனவரி 22) திறந்து வைத்தது 3201 என்ற ஒற்றை பெருமை கொண்டதே தவிர வேறு எந்த மாற்றத்தையும் இதுதராது.

மனைவியைக் கூட கவனிக்காத ஒருவர். ராமர் சிலையைப் பிரதிஷ்டை செய்வது தவறு. வழக்கமாக ராமர் கோயில் என்றால் அது பட்டாபிஷேக கோலத்திலோ அல்லது சீதா தேவியுடன் இணைந்த ராமர் கோயிலாகத் தான் இருக்கும். ஆனால், அயோத்தியில் அமைத்துள்ள குழந்தை இராமர் சிலை மோடிக்காக அமைக்கப்பட்டது. சங்கராச்சாரியார் சிலர் கோயில் திருப்பணி முழுமை பெறாமல் கோயிலைத் திறக்கக் கூடாது. கும்பாபிஷேகத்தை அரசியல் ஆக்கக் கூடாது என்று கூறியும் கோயிலை வேண்டும் என்று திறந்துள்ளனர்.

அயோத்தி ராமர் கோயிலுக்கு யாரும் எதிராக இல்லை. அமைதியாகவும் மகிழ்ச்சியாக நடைபெற வேண்டிய கும்பாபிஷேகம் பதற்றத்துடன் நடந்து முடிந்துள்ளது. ராமர் கோயில் வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை. நீங்கள் தான் மசூதியை இடித்து விட்டு அந்த இடத்தில் ராமருக்குக் கோயில் கட்டுவோம் என்று கூறினீர்கள்.

அப்படியாவது நீங்கள் சொன்னபடி செய்தீர்களா என்றால் அதுவும் இல்லை, பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்திலிருந்து 3 கி.மீ தூரத்திற்கு அப்பால் தான் கட்டியிருக்கிறார்கள். இதில், திறமையாகப் பொய் சொல்லி, நாட்டு மக்களை நம்ப வைத்திருக்கிறார்கள்.

500 ஆண்டுக் கால அவமானம் போயிருக்கிறது என்கிறார்கள், இந்துக்களுக்கு எப்போது அவமானம் ஏற்பட்டது. 300 ஆண்டுகள் நம் தேசத்தை முகலாயர்கள் ஆண்ட போது கூட, இன்றும் இந்துக்கள் தான் பெரும்பான்மையாக உள்ளனர். இந்துக்கள் தங்களை தாங்களே வளர்த்துக் கொண்டார்களே தவிர, அவர்களை பாஜகவே அல்லது ஆர்எஸ்எஸ் காப்பாற்றவில்லை.

ராகுல் காந்தி தனது நடைப்பயணத்தில் ராமர் கோயிலுக்குச் சென்றதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தது சமூக விரோத செயல். காங்கிரஸ் கட்சி கோயிலுக்குச் செல்லாத கட்சி அல்ல, மோடி ராமர் கோயிலுக்குப் போகலாம். ஆனால் ராகுல் காந்தி போகக் கூடாது என்பது தீண்டாமை. உண்மையில் கோயிலுக்குச் செல்ல விடாமல் தடுத்தவர்கள் மீது தீண்டாமை வழக்குப் போட்டு இருக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:ராமர் கோயிலில் திரண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள்! கூட்ட நெரிசல்.. தள்ளுமுள்ளு!

ABOUT THE AUTHOR

...view details