தமிழ்நாடு

tamil nadu

புலிகளை மனிதர்களாகிய நாம் ஏன் பாதுகாக்க வேண்டும்? - தாளவாடி வனச்சரக அலுவலர் கூறுவது என்ன?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 11, 2024, 5:26 PM IST

Updated : Feb 12, 2024, 9:05 PM IST

Tigers: உலக அளவில் இந்தியாவில்தான் 80 சதவீத புலிகள் வசிக்கின்றன என தேசிய விலங்கு புலிகளின் குணாதிசயங்கள் குறித்து தாளவாடி வனச்சரக அலுவலர் விளக்கத்தை விரிவாக விவரிக்கிறது இந்த செய்தி.

இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை
இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை

ஈரோடு: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட தாளவாடி வனச்சரக அலுவலர் சதீஷ்குமார் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது, “நமது நாட்டின் தேசிய விலங்கான புலி, நமது கலாச்சாரத்தோடும், பண்பாட்டோடும் ஒன்றிணைந்த உயிரினம் ஆகும். துல்லியமான கண்பார்வை கொண்ட புலியானது, இந்தியாவில் 17 மாநிலங்களில் வசிக்கின்றன.

புலிகளை மனிதர்களாகிய நாம் ஏன் பாதுகாக்க வேண்டும்

உலகம் முழுவதும் இருக்கக்கூடிய புலிகளின் எண்ணிக்கையில், இந்தியாவில்தான் 80 சதவீதம் புலிகள் வசிக்கின்றன. புலிகளை பொறுத்தவரை, சுமத்திரன் டைகர் (Sumatran Tiger), சைபீரியன் டைகர் (Siberian Tiger), இந்தோ சைனீஸ் டைகர் (Indochinese Tiger), மலேயன் டைகர் (Malayan Tiger), சவுத் சைனா டைகர் (South China Tiger) என ஆறு வகைகள் உள்ளது.

குறிப்பாக, இந்தியாவில் ராயல் பெங்கால் புலிகள் (Royal Bengal Tiger) அதிகம் உள்ளன. மேற்குவங்க மாநிலத்தில் சுந்தரவனக் காடுகளில் வசிக்கும் வங்கப் புலிகள்தான் இவை. 2022ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் மொத்தம் 3 ஆயிரத்து 682 புலிகள் உள்ளன. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை புலிகள் கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம்.

இந்தியாவில் இருக்கும் புலிகளின் எண்ணிக்கையில், தமிழகம் ஐந்தாவது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் உள்ள ஐந்து புலிகள் காப்பகம் மூலமாக, புலிகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. காடுகளில் வசிக்கும் புலிகள் 15 ஆண்டுகள் வரையும், உயிரின பூங்காக்களில் பராமரிக்கப்படும் புலிகள் 20 ஆண்டுகள் வரையும் உயிர் வாழ்கின்றன.

புலிகளானது ஐந்து குட்டிகள் வரை ஈனும் தன்மை கொண்டது. அதேபோல், தனது குட்டிகளை இரண்டு வருடங்கள் வரைதான் உடன் வைத்துக் கொள்ளும். அதன் பின்னர், தன் தாயை விட்டு குட்டிகள் பிரிந்து செல்கின்றன. பதுங்கி தாக்கக்கூடிய குணாதிசயம் கொண்ட வன உயிரினம், புலி.

கடமான், காட்டெருமை போன்ற வனவிலங்குகளை வேட்டையாடும் புலிகள், அதை நான்கு நாட்கள் வரை வைத்து சாப்பிடக்கூடிய குணம் கொண்டவை. புலிகள், காடுகளில் தங்களது எல்லைகளை நிர்ணயித்துக் கொள்ள நகம் மூலம் மரங்களில் காயங்கள் ஏற்படுத்துவது, நான்கு திசைகளிலும் சிறுநீரை வைத்து, அதன் எல்லையை வரையறுத்துக் கொள்கிறது.

எல்லை தாண்டி வரும் புலிகளை உள்ளே அனுமதிக்க மறுப்பதோடு, இரு புலிகளும் சண்டையிட்டுக் கொள்ளும். சண்டையில் வெற்றி பெறும் புலி, அந்த எல்லையில் இருந்து கொள்ளும். புலிகளை பாதுகாப்பதன் மூலம், மரங்கள் அதிக அளவில் உருவாகின்றன. மனித குலம் சிறப்பாக வாழ வேண்டுமென்றால், காடுகளில் புலிகள் இருப்பது அவசியமாகிறது. அந்த வகையில், புலிகளைப் பாதுகாக்க வனத்துறையோடு பொதுமக்களும் இணைந்து செயல்பட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மேகாலயா தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதன் பதவியேற்றார்!

Last Updated : Feb 12, 2024, 9:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details