தமிழ்நாடு

tamil nadu

பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி 5 வருடம் ஆகிவிட்டது.. மதுரை எய்ம்ஸ் எங்கே? சு.வெங்கடேசன் எம்.பி!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 27, 2024, 4:19 PM IST

Madurai AIIMS: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்குப் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி இன்றுடன் (ஜன.27) ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், எப்பொழுது எய்ம்ஸ் மருத்துவமனை செயல்படுத்துவார்கள் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

su venkatesan mp
சு வெங்கடேசன் எம்பி

மதுரை:மதுரை, சிவகங்கை,விருதுநகர், திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்ட மக்கள் பயனடையும் நோக்கில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கக் கடந்த 2015ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி முடிவானது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த 2018ஆம் ஆண்டு ஜூன் 20ஆம் தேதி வெளியானது.

இதனையடுத்து மதுரை-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலைக்கு அருகே அமைந்துள்ள தோப்பூர் கிராமத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிலங்கள் தமிழக அரசால் கையகப்படுத்தப்பட்டன. இதே காலகட்டத்தில் இந்தியாவின் பிற மாநிலங்களில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். அதுமட்டுமன்றி, அடுத்த 45 மாதங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்குத் திறந்து வைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இதற்கான கட்டுமானத்திற்கான நிதிக்காக ஜப்பானைச் சேர்ந்த ஜைகா என்ற அமைப்புடன் இந்திய அரசால் கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26ஆம் தேதி கடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதற்காக ரூ.1977.80 மதிப்பீடு செய்யப்பட்டது இதில் ரூ.1627.70 கோடியை ஜைகா நிறுவனம் மூலமாகவும் மீதமுள்ள தொகை மத்திய அரசாலும் வழங்கப்படும் என முடிவு செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாகத் திட்ட அமலாக்கக் குழுவும் அதற்கான பதவிகளும் உருவாக்கப்பட்டன.

இந்நிலையில், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் வாயிலாகக் கேட்கப்பட்ட கேள்விக்கு வருகின்ற 2026 ஆம் ஆண்டிற்குள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என மத்திய சுகாதார அமைச்சகம் பதில் அளித்துள்ளது.

5 ஆண்டுகள்:மதுரை எய்ம்ஸ் கட்டுமானத்திற்கான திட்ட மேலாண்மை இயக்குநர் நியமிக்கப்பட்டுள்ளார். (PMC - Project Management Consultant). எய்ம்ஸ் கட்டுமானத்திற்கான மாஸ்டர் பிளான் இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனைக்குப் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி இன்றுடன் ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனையடுத்து, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எங்கள் எய்ம்ஸ் எங்கே? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியாவில், 22 இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், 6 மருத்துவமனைகள் ஏற்கனவே செயல்பட்டு வருகின்றன. மீதமுள்ள 16 மருத்துவமனைகளில் பல மாநிலங்கள் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், எய்ம்ஸ் குறித்த மத்திய அரசின் பரிந்துரைகள் குறித்து முடிவெடுப்பதற்கான கூட்டம் கடந்தாண்டு ஜூலை 16-ஆம் தேதி நடைபெற்றது. அதில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை சார்பாகத் தற்காலிகமாக மதுரை, தேனி, சிவகங்கை மருத்துவக் கல்லூரிகளில் முதற்கட்டமாக 50 எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கைக்காக இந்திய ஒன்றிய அரசிடம் பரிந்துரையும் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், ஜப்பான் நிறுவனத்துடனான ஒப்பந்தம் 2021ஆம் ஆண்டு மார்ச் 31இல் இறுதியாகும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒன்றிய அரசின் சார்பாக மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தும்கூட, இதுவரை மதுரை தோப்பூரில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டதைத் தவிர வேறு எந்தவிதமான கட்டுமானப்பணிகளும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் குறித்து அவ்வப்போது மத்திய மற்றும் மாநில அமைச்சர்கள் கருத்து தெரிவித்து வந்தாலும், அதுகுறித்து முழுமையான வடிவம் குறித்து குழப்பமான நிலையே நீடித்து வந்தது. இதற்கிடையே கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற நிர்வாக அளவிலான கூட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகள் வருகின்ற 2023ஆம் ஆண்டு தொடங்கி 2026ஆம் ஆண்டுதான் நிறைவடையும் என அறிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க:மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைக்க நிதிஷ் குமார் திட்டம் என தகவல்.. காங்கிரஸ் ரியாக்‌ஷன் என்ன?

ABOUT THE AUTHOR

...view details