தமிழ்நாடு

tamil nadu

கஞ்சா போதையில் அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கிய 6 பேர் திருச்சி சிறையில் அடைப்பு! - BUS DRIVER ATTACK CASE

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 23, 2024, 9:49 AM IST

கும்பகோணம் அருகே கஞ்சா போதையில் அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் இரண்டு செய்தியாளர்களை தாக்கிய 6 பேர் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

BUS DRIVER ATTACK CASE
BUS DRIVER ATTACK CASE

தஞ்சாவூர்:கும்பகோணம் பழைய பாலக்கரை காவிரி ஆற்றுப்பாலத்தில், பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் நோக்கி வந்த வழித்தடம் ஏ14 நகர அரசு பேருந்தை திருவாய்ப்பாடியை சேர்ந்த ரமேஷ் ஓட்டி வந்துள்ளார். செந்தில்நாதன் நடத்துநராக இருந்துள்ளார்.

இந்த நிலையில் கஞ்சா போதையில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள், பேருந்துக்குள் ஏறி, ஒட்டுநரை வசைபாடி அவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தை அங்கிருந்த தனியார் தொலைகாட்சியை சேர்ந்த நாடிமுத்து மற்றும் அருண் என்ற 2 செய்தியாளர்கள் ஒளிப்பதிவு செய்து கொண்டிருந்தனர்.

இதனை பார்த்த போதை ஆசாமி இளைஞர்கள் செய்தியாளர்கள் இருவர் மீது தாக்குதல் நடத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இதனைத்தொடர்ந்து காயமடைந்த அரசு பேருந்து ஓட்டுனர் ரமேஷ் மற்றும் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் இருவர் என மொத்தம் மூவரும் தனித்தனியே கும்பகோணம் மாநகர கிழக்கு காவல் நிலையத்தில் இச்சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்தனர்.

பின்னர் மூவரும் கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர் மேலும் அரசு பேருந்து ஓட்டுநர் ரமேஷ் தாக்கப்பட்ட சம்பவத்தில், அவரது 1½ சவரன் தங்க சங்கிலி, அரை சவரன் மோதிரம் ஆகியவையும் அந்த போதை கும்பலால் பறித்துத் தப்பியோடியுள்ளது.

மேலும் செய்தியாளர்கள் நாடிமுத்து அருண் ஆகியோர் தாக்கப்பட்டபோது எடுத்த வீடியோ காட்சிகளும் முக்கிய ஆவணங்களாக காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கும்பகோணம் டிஎஸ்பி கீர்த்திவாசன் உத்தரவின் பேரில், இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளான, பாலக்கரை பகுதியை சேர்ந்த மாரிமுத்து, சுதர்சன், கார்த்திகேயன், உதயகுமார், ஜனார்த்தனன், சந்தோஷ் ஆகிய ஆறு நபர்களை கும்பகோணம் மாநகர கிழக்கு காவல் நிலைய காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் சம்பவம் நடந்த சில மணி நேரங்களில் அதிரடியாக கைது செய்தனர்.

இதன் பின்னர் அவர்கள் அனைவர் மீதும் வழிப்பறி, கொலை மிரட்டல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், அரசு ஊழியரை தாக்குதல், தகாத வார்த்தையால் திட்டியது உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து அவர்களை கும்பகோணம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2 நீதிபதி இளவரசி முன்பு ஆஜர் படுத்தப்பட்டனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட 6 பேரையும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட அனைவரும் திருச்சி மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

இதையும் படிங்க:பாங்காக் பயணியின் பையில் 10 அனகோண்டா - மிரண்டு போன சுங்கத் துறை! என்ன நடந்தது?

ABOUT THE AUTHOR

...view details