தமிழ்நாடு

tamil nadu

கச்சத்தீவு திருவிழா புறக்கணிப்பை தொடர்ந்து சாகும் வரை உண்ணாவிரதம்.. வலுவடையும் ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 24, 2024, 12:22 PM IST

Rameswaram Fishermen hunger strike: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக குற்றம்சாட்டி படகோட்டிகளுக்கும், மீனவருக்கும் இலங்கை அரசு சிறை தண்டனை விதித்ததைக் கண்டித்து சாகும் வரை தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ராமேஸ்வரம் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Rameswaram fishermen hunger strike demanding release of tn fishermen from srilanka jail
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

ராமநாதபுரம்:எல்லை தாண்டி மீன் பிடித்ததாக குற்றம்சாட்டி படகோட்டிகளுக்கும், மீனவருக்கும் இலங்கை அரசு சிறைத் தண்டனை விதித்ததைக் கண்டித்து, ராமேஸ்வரம் அடுத்த தங்கச்சிமடம் வலசை பேருந்து நிறுத்தத்தில், சாகும் வரை தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ராமேஸ்வரம் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக கடலோரப் பகுதியில் இருந்து மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக குற்றம் சாட்டி, மீனவர்கள் மற்றும் படகோட்டிகளை இலங்கை கடற்படை கைது செய்வது தொடர்கதையாகி வருகிறது. இதன் காரணமாக, தமிழகத்தைச் சேர்ந்த சில மீனவர்கள் தற்போதும் இலங்கை சிறையில் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த பிப்.4ஆம் தேதி, தமிழக கடலோரப் பகுதியில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள், இலங்கை காங்கேசன் கடல் எல்லைப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இரண்டு விசைப்படகுகளையும், அதிலிருந்த 23 மீனவர்களையும் கைது செய்தனர்.

இது ராமேஸ்வரம் மீனவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ராமேஸ்வரம் மீனவர்கள் மீதான வழக்கு விசாரணை, ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது, கைது செய்யப்பட்ட மீனவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி, கைது செய்யப்பட்ட 23 மீனவர்களில் 20 மீனவர்களை மட்டும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

மேலும், விசைப்படகுகளின் ஓட்டுநர்கள் இரண்டு பேருக்கு தலா 6 மாதங்கள் சிறைத் தண்டனையும், 2வது முறையாக எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் மீனவர் ஒருவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து, நீதிமன்ற உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்த ராமேஸ்வரம் மீனவர்கள், கடந்த பிப்.17ஆம் தேதி முதல் தங்கள் படகுகளில் கருப்பு கொடி கட்டி தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, கச்சத்தீவு திருவிழாவையும் புறக்கணித்துள்ளனர்.

இந்நிலையில், தற்போது படகோட்டிகளுக்கு ஆறு மாத சிறைத் தண்டனை மற்றும் மீனவர்களுக்கு ஓராண்டு முதல் இரண்டு ஆண்டு வரை சிறை தண்டனை என இலங்கை அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டத்தைக் கண்டித்தும், சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும், ராமேஸ்வரம் அடுத்த தங்கச்சிமடம் வலசை பேருந்து நிறுத்தத்தில் சாகும் வரை தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:கச்சத்தீவு திருவிழா புறக்கணிப்பு.. வெறிச்சோடி காணப்பட்ட ராமேஸ்வரம் துறைமுகம்!

ABOUT THE AUTHOR

...view details