தமிழ்நாடு

tamil nadu

புதுச்சேரி சிறுமி கொலை; உடலை பெற்ற பெற்றோர்.. நிவாரணம் அறிவித்த அரசு - வலுக்கும் போராட்டம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 6, 2024, 4:52 PM IST

Updated : Mar 6, 2024, 5:13 PM IST

Puducherry Girl Missing issue: புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், திமுக எம்.பி கனிமொழி மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் புதுச்சேரியில் சிறுமி வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Puducherry Girl Missing issue
புதுச்சேரி சிறுமி சடலமாக மீட்கப்பட்ட விவகாரம்

புதுச்சேரி: புதுச்சேரியைச் சேர்ந்த 9 வயது சிறுமி ஒருவர், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு திடீரென மாயமான நிலையில், நான்காவது நாளான நேற்று (மார்ச் 5) அவரது வீட்டின் அருகில் உள்ள வாய்க்காலில் சடலமாக இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, போலீசார் சிறுமியின் உடலைக் கைப்பற்றி அரசு பொது மருத்துவமனையில் உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக, விவேகானந்தன் (59), கருணா (19) என்ற இரண்டு நபர்களைக் கைது செய்து, அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அந்த சிறுமியை ஒரு வீட்டில் அடைத்து சித்திரவதை செய்து கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதுமட்டுமல்லாது, இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் வேறு யாரேனும் உள்ளனரா என்று, போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அந்த சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டாரா என்பது உடற்கூறு ஆய்விற்குப் பின்பு தெரிய வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகரில் நிலவும் பரபரப்பான சூழ்நிலை: இந்த சம்பவத்தைக் கண்டித்து புதுச்சேரி மாநகர் பகுதிகளில் கடற்கரை சாலை காந்தி சிலை, முத்தியால்பேட்டை மணிக்கூண்டு, ஆளுநர் மாளிகை, சட்டப்பேரவை, ராஜா திரையரங்கு சந்திப்பு மற்றும் அண்ணா சிலை சந்திப்பு என பல்வேறு இடங்களில் சமூக அமைப்பினர்கள், பல்வேறு கட்சியினர், மாணவ அமைப்பினர், கல்லூரி மற்றும் சட்டக் கல்லூரி மாணவ மாணவிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதால், நகரில் பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது.

கடலில் இறங்கி போராட்டம்: சிறுமி இறப்புக்கு ஆதரவாக கடலில் இறங்கி போராடிய மக்கள், "பெண் குழந்தைக்கு பாதுகாப்பு வேண்டும், உயிரிழந்த சிறுமிக்கு நீதி வேண்டும், குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும், போதைப்பொருளைத் தடை செய்ய வேண்டும்" என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பிப் போராடி வருகின்றனர். திடீரென ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை, போலீசார் அப்புறப்படுத்த முயன்றபோது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சூழ்நிலையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், திமுக எம்.பி கனிமொழி மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர், புதுச்சேரியில் சிறுமி வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழிசை சவுந்தரராஜன்: “சிறுமி கொலையால் நிலை குலைந்து விட்டேன். எனது மனம் அடைந்த வேதனையைச் சொல்ல முடியாது. சிறுமி கொலையில் மிகத் தீவிரமான நடவடிக்கையை நான் எடுப்பேன். சிறுமி கொலை வழக்கில் இருந்து குற்றவாளிகள் தப்பிக்க முடியாது. போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த புதுச்சேரி காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளேன்" என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார் மேலும், தனது 'X' வலைதளப் பக்கத்தில், "ஹைதராபாத்தில் இருந்து அவசரமாகப் புதுச்சேரிக்குச் செல்கிறேன்" என்றும் பதிவிட்டுள்ளார்.

கனிமொழி: புதுச்சேரியில் சிறுமி படுகொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள கனிமொழி, "பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை சாதாரணமாக நடப்பது மாற்றப்பட வேண்டும். பெண்களை மரியாதையாக நடத்த வேண்டும் என சொல்லி குழந்தைகளை வளர்க்க வேண்டும்" என்று அவர் தெரிவித்துள்ளார்

எடப்பாடி பழனிசாமி: புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொடூர மனம் படைத்த சிலரால் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு எனது கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்கு போக்சோ சட்டங்கள் மட்டும் போதாது, இத்தகைய காட்டுமிராண்டிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும். அதுவே, இது போன்ற குற்றங்கள் இனி தொடராமல் பாதுகாக்கும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மேலும், இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம், சிறுமி வன்கொடுமை கொலை தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் எனவும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், உரிய தீர்வு கிடைக்காமல் சிறுமியின் சடலத்தை வாங்க மாட்டோம் என மறுப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சிறுமியின் பெற்றோர், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத் தரப்படும் என்ற உறுதியை ஏற்று, சிறுமியின் சடலத்தை பெற்றுக் கொண்டனர்.

இதையும் படிங்க:திருமண பரிசு தராத கணவருக்கு கத்திக்குத்து - ஆத்திரத்தில் மனைவி அதிரடி முடிவு!

Last Updated : Mar 6, 2024, 5:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details