தமிழ்நாடு

tamil nadu

ஈரோட்டில் 2வது நாளாக தொடரும் ஆக்கிரமிப்புக் கடைகள் அகற்றம்.. வாக்குவாதத்தில் ஈடுபடும் வியாபாரிகள்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 16, 2024, 12:14 PM IST

Encroachment shop removal in Erode: ஈரோட்டில் சாலை ஆக்கிரமிப்பில் இருந்ததாகக் கூறி, 700க்கும் மேற்பட்ட கடைகளை மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலை அதிகாரிகள் அகற்றும் பணியில் ஈடுபட்டதைக் கண்டித்து, கடை உரிமையாளர்கள் சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோட்டில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
ஈரோட்டில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

ஈரோட்டில் 2வது நாளாக தொடரும் ஆக்கிரமிப்புக் கடைகள் அகற்றம்

ஈரோடு: ஈரோடு மாநகரம் பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் செயல்பட்டு வரும் ஜவுளி சந்தைகள் புகழ் பெற்றவை. இப்பகுதியில் மொத்த விற்பனை மற்றும் சில்லறை வணிகம் என சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் இருக்கின்றன. இப்பகுதியில், அரசு தரப்பில் ஜவுளிக் கடைகளுக்கென பிரத்தியேக வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது.

அந்த வணிக வளாகம், விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நிலையில், பன்னீர் செல்வம் பூங்காவில் இருந்து ஈரோடு பேருந்து நிலையம் செல்லும் மணிக்கூண்டு முதல் எல்லை மாரியம்மன் கோயில் வரையிலான பிரதான சாலையில், சுமார் 700க்கும் மேற்பட்ட கடைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், இந்த ஆக்கிரமிப்புக் கடைகளால் அப்பகுதியில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். சில நேரங்களில், பாதசாரிகள் கூட நடந்து செல்ல முடியாத அளவிற்கு கடும் நெரிசல் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

மேலும், ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்ற வேண்டியும், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல்களை ஒழுங்குபடுத்த தக்க நடவடிக்கை எடுக்க வேண்டியும், மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்திடம் பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கும், தங்கள் கடைகளை அகற்ற கால அவகாசம் அளித்தும், யாரும் கடைகளை அகற்றவில்லை என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று (பிப்.15) காலை அப்பகுதியில் ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

பின்னர், ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனைக் கண்டித்து, அப்பகுதியில் ஜவுளிக் கடை வைத்திருந்த நபர்கள், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

இது குறித்து தகவலறிந்த காவல் துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும், போராட்டத்தில் ஈடுபட்ட கடை உரிமையாளர்கள் சாலையில் படுத்தும், ஜேசிபி இயந்திரம் முன்பு சாலையில் அமர்ந்தும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இதனிடையே, சாலையோர ஆக்கிரமிப்பு பணிகளை மாநகராட்சி அதிகாரிகள் தொடர்ந்து மேற்கொண்டனர். இந்நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் (பிப்.16) ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்றும் பணிகளை மாநகராட்சி அதிகாரிகள், தூய்மைப் பணியாளர்கள் உதவியுடன் ஈடுபட்டுள்ளனர்.

அந்த வகையில், ஆர்கேவி சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரம் போடப்பட்டு இருந்த தள்ளு வண்டி கடைகள், பேனர்கள் ஆகியவற்றை அகற்றினர். அப்போது, சாலையை ஆக்கிரமித்துள்ள பெரிய நிறுவனங்கள் கடைகளை அகற்றாமல், சிறு கடைகள் மீது நடவடிக்கை எடுப்பதாகக் கூறி வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இருப்பினும், வியாபாரிகளின் கேள்விகளை பொருட்படுத்தாத மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், காவல்துறை பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை தொடர்ந்து ஈடுபட்டனர்.

இதையும் படிங்க:விவசாயிகள் போராட்டம்; பிப்.18-இல் 4ஆம் கட்ட பேச்சுவார்த்தை!

ABOUT THE AUTHOR

...view details