சென்னை:வளசரவாக்கம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் உணவு ஆர்டர் செய்து வாங்கிவிட்டு, திரைப்பட பாணியில் பணமும் தராமல், உணவு கடை ஊழியரின் செல்போனையும் மர்ம நபர் ஒருவர் நூதன முறையில் ஏமாற்றிச் சென்ற சம்பவம் நிகழ்ந்ததாக பாஸ்ட் புட் கடை சார்பில் ராமாபுரம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அந்த புகாரில், "வளசரவாக்கம் அடுத்த ராமாபுரம் முல்லை நகர் பகுதியில் உள்ள பாஸ்ட் புட் கடைக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு வந்த நபர் ஒருவர் 5 சிக்கன் ரைஸ், சிக்கன் லாலிபாப் உள்ளிட்டவற்றை வாங்கியுள்ளார். பின்னர் தான் அருகில் வசித்து வருவதாகவும், பணம் கொண்டு வரவில்லை ஊழியரை அனுப்பினால் பணத்தை கொடுத்து அனுப்புவதாக கூறியுள்ளார்.
அதனை நம்பிய கடை உரிமையாளர், ஊழியரை அனுப்பியுள்ளார். அப்போது அந்த நபரின் செல்போனை வாங்கி, வீடு மேலே தான் உள்ளது எனத் தெரிவித்துவிட்டு, போனில் மேலே வரும் நபரிடம் பணம் கொடுத்து அனுப்பு என பேசுவது போல் பாவலா காட்டியதாகவும், பின அந்த வாலிபர் மேலே சென்று பார்த்தபோது, அங்கு யாருமில்லை என ஊழியர் கீழே வந்து பார்த்த போது, அந்த நம்பர் செல்போனை எடுத்துச் சென்றதாகவும், அப்போதுதான் தங்களை அந்த நபர் ஏமாற்றியது தெரிய வந்ததாகவும் போலீசில் அளித்த புகாரில் தெரிவித்துள்ளனர்.
தற்போது அந்த புகாரின் அடிப்படையில், ராமாபுரம் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மற்றும் அந்த நபரின் செல்போன் எண்ணை வைத்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, கடந்த ஜன.12ம் தேதி கிடைத்த சிசிடிவிகளின் அடிப்படையில் விசாரித்த போது, மோசடியில் ஈடுபட்ட நபர் கொடுங்கையூர், முத்தமிழ் நகரைச் சேர்ந்த நசீர் கான்(34) என்பது தெரிய வந்துள்ளது.