தேனி:தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி அலுவலகத்தில், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பரப்புரையாளராக ஏழு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளம் பகுதியைச் சேர்ந்த ஜெயராணியும் (33) பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், பெரியகுளம் நகராட்சி ஆணையாளர் மீனா என்பவர், கடந்த இரண்டு நாட்களாக ஜெயராணியை அழைத்து, பணிகள் முறையாக செய்வதில்லை எனவும், தகாத வார்த்தைகளால் குடும்பத்தினரையும், அவரையும் மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் பேசி தொடர்ந்து திட்டி வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஜெயராணி மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்த நிலையில், அவர் இன்று தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளார். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை வழங்கப்படுகிறது.