தமிழ்நாடு

tamil nadu

தொடரும் நிதி நிறுவன மோசடி.. தேனியில் 7 கோடியுடன் தலைமறைவானதாக எஸ்.பி., ஆபிஸில் புகார்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 21, 2024, 4:11 PM IST

SP Finance Scam in Theni: தேனியில் நிதி நிறுவனம் மூலம் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களிடம் 7 கோடி ரூபாய் வரை மோசடி செய்து தலைமறைவான நிதி நிறுவன உரிமையாளரை கைது செய்யக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

Etv Bharat
Etv Bharat

புகார் அளித்த மக்களின் பேட்டி

தேனி: மதுரை, தேனி, பழனி உள்ளிட்ட பகுதிகளில் எஸ்.பி சொசைட்டி என்ற பெயரில் அபாஸ்கான் என்பவர் கடந்த 3 ஆண்டுகளாக நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். சுமார் 150 நபர்களிடம் வைப்புத் தொகையாக ஒரு லட்சம் முதல் ஐந்து லட்சம் வரை பெற்று, அவர்களை நிதி நிறுவன பணியாளர்களாக இணைத்துக் கொண்டுள்ளார்.

மேலும், நிறுவனத்தில் சேர்ந்த நபர்கள் மூலமாக வாடிக்கையாளர்களை சேர்க்கும் முயற்சியை கடந்த மூன்று ஆண்டுகளாக ஈடுபட்டு வந்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர். பின்னர், தங்களை நம்பிய வாடிக்கையாளர்களிடம் சிறுசேமிப்பு, மாத சேமிப்பு என்று பெற்று முதிர்வு காலம் முடிந்தபின் பல மடங்கு வட்டியுடன் சேர்த்து தருவதாக ஆசை வார்த்தை கூறி, பலரிடம் பணத்தைப் பெற்றது தெரிகிறது.

இவ்வாறு, தங்கள் நிறுவனத்தின் மீது நம்பிக்கை கொண்ட ஒவ்வொரு வாடிக்கையாளர்களின் மூலம், அவர்களுக்கு தெரிந்தவர்களை இந்த நிறுவனத்தின் திட்டத்தில் இணைத்து அவர்களின் முதலீடு செய்ய வைப்பது என கிட்டத்தட்ட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களிடம், 7 கோடி ரூபாய் வரை பணத்தை பெற்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பணத்தை முதலீடு செய்த வாடிக்கையாளர்கள் முதிர்வு காலம் முடிந்ததை அடுத்து முதலீடு செய்த தொகையை நிதி நிறுவன உரிமையாளரான அபாஸ்கானிடம் கேட்டுள்ளனர். பணத்தை திருப்பி தருவதாகக் கூறி காலதாமதம் செய்து வந்த நிலையில், தற்போது அந்த நிறுவனத்தினர் தங்களின் அனைத்து கிளைகளையும் மூடிவிட்டு தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே, நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து ஏமாற்றப்பட்டதை அறிந்த மக்கள், தங்களை ஏமாற்றிய நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியும், தாங்கள் முதலீடு செய்த பணத்தை மீட்டுத் தர வேண்டியும், நேற்று (பிப்.20) தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

பின்னர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய காவல் துறையினர், புகார் மனுவை பெற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இது குறித்து, நிறுவனத்தில் பணிபுரிந்த வினித்குமார் செய்தியாளர்களிடம் தனது புகார்களை கூறினார்.

அப்போது பேசிய அவர், "நிறுவனத்தில் நிரந்தரமாக பணிபுரிய லட்சக் கணக்கில் பணம் கேட்டனர். அதைக்கட்டித் தான் சுமார் ஒன்றரை ஆண்டுகளாக நான் அந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தேன். பின்னர் காலப்போக்கில் எங்களுக்கு தரும் சம்பளத்தை நிறுத்திவிட்டனர். என் மீதுள்ள நம்பிக்கையால் பல வாடிக்கையாளர் 7 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்தார்கள்.

தற்போது, பணத்தை முதலீடு செய்த நபர்கள் எங்களிடம் அவர்கள் முதலீடு செய்த பணத்தை கேட்கின்றனர். நிரந்தர வேலை தருவதாகக் கூறிய ஆசை வார்த்தை நம்பி சுமார் 150 பேர் இந்த நிறுவனத்தால் ஏமாற்றப்பட்டுள்ளோம். மேலும், எங்கள் பணத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

மேலும், கைலாசபட்டி கிரமத்தைச் சேர்ந்த முத்துபிரியா என்பவர் கூறுகையில், தான் குடிசை தொழில் செய்து வருவதாகவும், அதில் கிடைக்கும் வருமானத்தை சிறுக சிறுக சேமித்து பணத்தை முதலீடு செய்ததாகவும், தங்களிடம் பணத்தை பெற்ற நிறுவனம் ஏமாற்றிவிட்டதாகவும், தங்கள் பணத்தை மீட்டு தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க கூறினார்.

இதையும் படிங்க:மோசடி வழக்கில் பாஜக பிரமுகரும், நடிகையுமான ஜெயலட்சுமி கைது!

ABOUT THE AUTHOR

...view details