கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மாவட்டம், கோட்டைமேடு பகுதியில் கடந்த 2022ஆம் ஆண்டு கார் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு பலரைக் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக கோயம்புத்தூரில் உள்ள அரபிக் கல்லூரிகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஏற்கனவே சோதனை நடத்தி இருந்தனர். இந்நிலையில் இன்று (பிப்.10) காலை கோயம்புத்தூரில் 12 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். உக்கடம், கரும்புக்கடை, குனியமுத்தூர், போத்தனூர் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடைபெற்று வருகிறது.
உக்கடம் அல் அமீன் காலணி இரண்டாவது வீதியில் உள்ள ஏசி மெக்கானிக் அபிபூர் ரகுமான் என்பவரது வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று காலை 6 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், அரபிக் கல்லூரியில் படித்த மாணவர்களுக்கு தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா? என்ற கோணத்தில் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது.