தமிழ்நாடு

tamil nadu

"விவிபேட் பயன்படுத்தும் முறை மாற்றம்; 2% தவறான வாக்குப்பதிவுக்கு வாய்ப்பு" - ஆர்.எஸ்.பாரதி அளித்த விளக்கம் என்ன? - lok sabha election 2024

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 3, 2024, 3:03 PM IST

DMK RS BHARATHI: தேர்தல் ஆணையத்தின் புதிய நடைமுறையில் ஒவ்வொரு தொகுதிகளிலும் 2 சதவீதம் தவறு வருவதற்கு வாய்ப்பு உள்ளது என தேர்தல் ஆணையமே கூறியுள்ளது எனவும் 2 சதவீதம் வாக்குகளில் வித்தியாசம் ஏற்படுமானால் அதனை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

DMK RS BHARATHI
DMK RS BHARATHI

DMK RS BHARATHI

சென்னை:வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பான விதிமுறைகளை வகுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரியும், தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தி இருக்கும் புதிய நடைமுறையை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்நிலையில், இது குறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர். இளங்கோ ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது ஆர்.எஸ்.பாரதி பேசுகையில், "இதுவரையில் நடைபெற்ற தேர்தல்களுக்கும், தற்போது நடைபெறவுள்ள தேர்தலுக்கு இடையே புதிய ஷரத்தை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய ஷரத்து அறிமுகம் என்பது தேர்தல் ஆணைய விதிப்படி தவறானது என்பதை சென்னை வந்த போது தலைமை தேர்தல் ஆணையரிடம் தெரிவித்துள்ளோம்.

நாங்கள் கூறிய கருத்துகளை கேட்டுக்கொண்ட தேர்தல் ஆணையம் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் தற்போது வழக்கு தொடுத்துள்ளோம். இந்த புதிய ஷரத்து, ஒரு தொகுதியில் 2 சதவீதம் வாக்குப்பதிவு தவறு ஏற்பட வாய்ப்புள்ளது என தேர்தல் ஆணையம் கூறுகிறது. உதாரணத்திற்கு ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் உள்ள 22 லட்சத்து 30 ஆயிரம் வாக்களர்களில் 2 சதவீதம் வாக்கு என்பது 46 ஆயிரம் வாக்குகள்.

வாக்குப்பதிவு இயந்திரங்களில் 22 லட்சம் வாக்காளர்களில் 2 சதவீதம் மாற வாய்ப்பிருக்கிறது என்று சொன்னால் ஏறத்தாழ 46 ஆயிரம் வாக்குகள் வரையில் தவறு நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது. ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு 46 ஆயிரம் வாக்குகள் என்பது சாதாரண விஷயம் அல்ல. கடந்த 2019-ல் விசிக தலைவர் திருமாவளவன் கூட மூன்றாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றார்.

இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் வற்புறுத்தி உள்ளோம். ஆனாலும் அது குறித்து தேர்தல் ஆணையம் உரிய பதில் தரவில்லை. இது நிவர்த்தி செய்யப்பட வேண்டும். வாக்கு இயந்திரங்கள் மீது சந்தேகம் எழுந்துள்ளது அதை போக்க வேண்டிய கடமை தேர்தல் ஆணையத்திடம் உள்ளது. வாக்கு இயந்திரங்களில் கடந்த முறை செயல்படுத்தப்பட்ட நடைமுறையை இந்த முறையும் பின்பற்ற வேண்டும்.

விவிபேட் பயன்படுத்தும் நடைமுறையை மாற்றுகின்றனர், இதுதான் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தி இருக்கும் புதிய நடைமுறையை மாற்ற வேண்டும். விவி பேட் ஒப்புகைச்சீட்டை நூற்றுக்கு நூறு சதவீதம் என்ன வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். முறையாக தேர்தல் நடைபெற வேண்டும். நியாயமாக வாக்குகள் எண்ணப்பட வேண்டும். வாக்கு இயந்திரங்கள் தயாரிப்பவர்களில் பாஜகவை சேர்ந்தவர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள் என்ற புகார்கள் இருக்கிறது.

இதையெல்லாம் நிவர்த்தி செய்வதற்காக நீதிமன்றத்தை நாடி உள்ளோம். நீதிமன்றம் பல தீர்ப்புகளை வழங்கிக் கொண்டிருக்கிறது. ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டுமானால் நியாயமான முறையில் தேர்தல் நடைபெற வேண்டும். வாக்காளர்கள் மீது நூற்றுக்கு நூறு நம்பிக்கை உள்ளது. ஆனால் கள்ளத்தனமாக யாரும் வந்து விடக்கூடாது. இனி வருங்காலங்களிலும் நியாயமான, நேர்மையான முறையில் தேர்தல் நடைபெற வேண்டும் என்பதற்காகவே திமுக வழக்கு தொடர்ந்துள்ளது.

திமுகவின் இந்த வழக்கு வழிகாட்டியாக இருக்கும் என்ற நிலை ஏற்படும். அதை நீதிமன்றம் முடிவு செய்து கொள்ளும். எங்கள் வெற்றி என்பது வாக்காளர் மீதான நம்பிக்கை. வாக்கு இயந்திரம் மீது நம்பிக்கை உள்ளது. ஆனால் பாஜகவினர் 400க்கு மேல் வெற்றி பெறுவோம் என அடித்து கூறுவதால் அதன் மீது சந்தேகம் உள்ளது. அதனை தேர்தல் ஆணையம் நிவர்த்தி செய்ய வேண்டும்” என தெரிவித்ததார்.

இடையே பேசிய என்.ஆர்.இளங்கோ, “பேலட் யூனிட்டில் இருந்து நேரடியாக கண்ட்ரோல் யூனிட்டுக்கு செல்லாமல் விவி பேட் மெஷின் வழியாக கண்ட்ரோல் யூனிட்டுருக்கு செல்கிறது. அது இயற்கையாக சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. வாக்குப்பதிவு இயந்திரத்தில் எந்த விதமான சோதனையும் செய்யாமல் வாக்குப்பதிவுக்கு முதல் நாள் இயந்திரத்தில் பொருத்தப்படும் கருவியின் மீது தான் சந்தேகம் உள்ளது. தேர்தலை சுதந்திரமாகவும், தன்னிச்சையாகவும் நடத்துவதற்கு என்னென்ன வழிகள் உள்ளதோ, அதை வழக்குகள் மூலமாக செய்வது அரசியல் கட்சியினுடைய கடமை. அதை திமுக செய்து வருகிறது” என்றார்.

இதையும் படிங்க: 35 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கை திரும்பிய முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ்.. நளினி லண்டன் செல்வதில் தாமதம் ஏன்? - Rajiv Gandhi Assassination Case

ABOUT THE AUTHOR

...view details