தமிழ்நாடு

tamil nadu

நாகப்பட்டினம் எம்பி செல்வராஜ் மறைவு..இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்! - Selvaraj passed away

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 13, 2024, 9:12 AM IST

Nagapattinam MP M Selvaraj passed away: நாகப்பட்டினம் தொகுதி மக்களைவை உறுப்பினர் எம்.செல்வராஜ் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

MP selvarasu and indian communist party logo photo
மறைந்த நாகை எம்பி செல்வராஜ் மற்றும் சிபிஐ கட்சி சின்னத்தின் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினரும், நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.செல்வராஜ் எம்பி(67) இன்று (13.05.2024) அதிகாலை 02.40 மணிக்கு சென்னை மருத்துவ மனையில் காலமானார் என்ற துயரச் செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

எம்.செல்வராஜ் திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றியத்தில் உள்ள கப்பலுடையான் என்ற ஊரில் வாழ்ந்து வந்த ஏழை விவசாயி முனியன் - குஞ்சம்மாள் தம்பதியரின் மகனாக 1957 மார்ச் 16ஆம் தேதி பிறந்தவர்.

நீடாமங்கலம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வலுவான மக்கள் தளமாகும். விவசாயிகள் இயக்கத்தில் முனியன், குஞ்சம்மாள் குடும்பமும் இணைந்து செயல்பட்டு வந்த நிலையில் எம்.செல்வராஜ் சிறுவயதிலேயே கம்யூனிஸ்டு இயக்கத்தில் சேர்ந்து செயல்படத் தொடங்கினார்.

எம்.செல்வராஜ் பள்ளிக் கல்வியை முடித்து திருவாரூர் திரு.வி.க அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார். மாணவர் பெருமன்றம், இளைஞர் பெருமன்றம் போன்ற அமைப்புகளில் தீவிரமாக செயல்பட்ட எம்.செல்வராஜ் அதன் மாவட்ட, மாநிலப் பொறுப்புகளை ஏற்று சிறப்பாக பணியாற்றியுள்ளார்.

எம்.செல்வராஜ் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நீடாமங்கலம் இடைக்குழு உறுப்பினர், துணைச் செயலாளர், செயலாளர் என்று படிப்படியாக உயர்ந்து ஒன்றுபட்ட தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர், மாநிலக் குழு உறுப்பினர், தேசியக் குழு உறுப்பினர் என பல்வேறு உயர் பொறுப்புகளுக்கு தேர்வு செய்யப்பட்டு சிறப்பாக பணியாற்றி வந்தார்.

ஒன்றுபட்ட தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் என பிரித்து அமைக்கப்பட்ட போது திருவாரூர் மாவட்டத் துணைச் செயலாளர், நாகப்பட்டினம் மாவட்டச் செயலாளர் ஆகிய பொறுப்புகளில் நீண்ட காலம் செயல்பட்டவர்.

வர்க்க எதிரிகளால் படுகொலை செய்யப்பட்ட சித்தமல்லி எஸ்.ஜி.முருகையன், மூத்த மகள் கமலவதனத்தை வாழ்விணையராக ஏற்று, அந்த குடும்பத்தின் மூத்த மருமகனாக, அந்தக் குடும்ப பொறுப்புகளை ஏற்று சிறப்பு சேர்த்தவர். கமலவதனம் திருவாரூர் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவராக ஐந்தாண்டுகள் பணியாற்ற ஊக்கம் தந்தவர்.

பின்னர் 1989ஆம் ஆண்டு நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதியில் பேட்டியிட்டு, வெற்றி பெற்று முதன் முறையாக மக்களவைக்கு சென்றவர். தொடர்ந்து 1996, 1998, 2019 ஆகிய ஆண்டுகளில் நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

நாடாளுமன்றத்தில் தொகுதி மக்களின் பிரச்சனைகளை முன்வைத்து போராடியவர். 1989 ஜூன் 12 காவிரி நதிநீர் பிரச்சனை மீது நடுவர் மன்றம் அமைக்க வலியுறுத்து தஞ்சாவூர் ராஜராஜ சோழன் சிலை முதல் வேதாரண்யம் ராஜாஜி பூங்கா வரை 110 கிலோ மீட்டர் தூரம் மனித சங்கிலிப் போராட்டம் நடத்தியதில் முன்னணி பங்கு வகித்தவர்.

ஓஎன்ஜிசி தொழிலாளர்கள், அமைப்புசாராத் தொழிலாளர்களை அணி திரட்டி தொழிற்சங்கம் அமைத்து தந்த எம்.செல்வராசு, தமிழ்நாடு ஏஐடியூசி துணைத் தலைவர் பொறுப்பில் செயல்பட்டு வந்தார். எம் செல்வராஜுக்கு ருத்திராபதி, என்ற முத்த சகோதரர், நாகம்மாள், சாரதா மணி என இரண்டு மூத்த சகோதரிகள், வீரமணி, வெற்றிச் செல்வி என இளைய சகோதரரும், சகோதரியும் உள்ளனர். இதில் முத்த சகோதரி நாகம்மாள் சில வருடங்களுக்கு முன்னர் காலமாகிவிட்டார்.

எம். செல்வராஜ் சிறுநீரகப் பாதிப்பு காரணமாக மாற்று சிறுநீரகம் பொருத்திக் கொள்ளும் சிகிச்சை பெற்றவர். இவரது சகோதரி சாரதாமணி சிறுநீரகம் அளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையிலும் கட்சி பொறுப்புகளையும், மக்கள் பிரதிநிதி என்ற முறையில் தொகுதிப் பிரச்சனைகளிலும் சலிப்பறியாது, சோர்வு அடைந்து, ஓய்ந்து விடாமல் முனைப்போடு செயல்பட்டு முன்னுதாரணமாக திகழ்ந்த வந்த தலைமைத்துவம் கொண்ட மக்கள் ஊழியரை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இழந்து நிற்கிறது.

செல்வராஜ், கமலவதனம் தம்பதியருக்கு செல்வப்பிரியா, தர்ஷினி என இரு மகள்கள் உள்ளனர். இதில் செல்வப் பிரியாவுக்கு கடந்த ஆண்டு (2023) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திருமணம் நடைபெற்றது. எம்.செல்வராஜ் எம்பியின் நாளை (14.05.2024) செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில், கோட்டூர் ஒன்றியத்தில் உள்ள சித்தமல்லி கிராமத்தில் அன்னாரது இறுதி நிகழ்வுகள் நடைபெறும்.

அன்னாரது மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு செங்கொடி தாழ்ந்தி, செவ்வணக்கம் கூறி, அஞ்சலி தெரிவித்துக் கொள்கிறது. அவரை இழந்து தவிக்கும் அவரது வாழ்விணையர் கமலவதனம், மகள்கள் செல்வப்பிரியா, தர்ஷினி உள்ளிட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது. மறைந்த தலைவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் தமிழ்நாடு முழுவதும் கட்சி அமைப்புகள், செங்கொடியினை அரைக் கம்பத்திற்கு இறக்கி விட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறது” எனக் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:நாகப்பட்டினம் எம்பி செல்வராஜ் காலமானார் - Selvaraj MP Passed Away

ABOUT THE AUTHOR

...view details