திருநெல்வேலி:நாம் தமிழர் கட்சியின் சார்பாக நெல்லை, தென்காசி ஆகிய இரண்டு மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளுக்கான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் முடிவில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடக்கூடிய முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்தார்.
அதன்படி, நெல்லை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் பா.சத்யா போட்டியிட உள்ளதாகத் தெரிவித்தார். மேலும், கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக மரிய ஜெனிபர் என்பவர் போட்டியிட உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
இதன் பின்னர் சீமான் பேசுகையில், “காவேரி நதிநீர், கச்சத்தீவு, மீத்தேன் உள்ளிட்ட எதைப் பற்றியும் பாஜகவுக்குக் கவலை இல்லை. மன்னை கொள்ளை அடிப்பது திராவிடம் அதைத் தடுக்காமல் இருக்கிறது பாஜக. இந்தியப் பொருளாதாரம் சீரழிந்துள்ளது. எதிர்க்கட்சியாக இருக்கும் போது மோடியை எதிர்ப்பதும் ஆளும் கட்சியானதுடன் அவரை வரவேற்பது தான் திமுகவின் கொள்கை.
தற்போது, கேலோ விளையாட்டுப் போட்டிக்குக் கூட தமிழில் பெயர் வைக்க முடியாமல் தான் திமுக உள்ளது. மோடி இதுவரை எந்த மாநில விளையாட்டுத் துறை அமைச்சரைச் சந்தித்துள்ளார். ஆனால், தமிழகத்தில் உள்ள விளையாட்டுத் துறை அமைச்சரை மட்டும் சந்தித்துள்ளார். இதில், இருவருக்கும் இடையே ஒரு நல்ல உறவு என்பது இருக்கிறது என்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது என்றார்.
இதையடுத்து, விஜய் அரசியல் கட்சி துவங்குவது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த அவர், "விஜய் அரசியல் கட்சி துவங்குவது ஆரோக்கியமாக இருக்கும். அண்ணன் மட்டும் தான் தமிழகத்தில் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார், அவருக்கு உறுதுணையாக இருப்போம் என விஜய் நினைக்கலாம்" என தெரிவித்தார்.