தமிழ்நாடு

tamil nadu

மருத்துவர் மற்றும் மனைவி கழுத்தறுத்து கொலை செய்த கும்பல்.. சிகிச்சைக்காக வந்து கொலை செய்ய காரணம் என்ன? - CHENNAI SIDDHA DOCTOR MURDER

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 29, 2024, 9:44 AM IST

Chennai Siddha doctor Murder: சென்னை ஆவடி அருகே சித்த மருத்துவர், அவரது மனைவி இருவரும் வீட்டில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SIDDHA DOCTOR MURDER  CASE
SIDDHA DOCTOR MURDER CASE

சென்னை:ஆவடி அருகே மிட்டனமல்லி காந்தி மெயின் ரோடு இரண்டாவது குறுக்குத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரரும் சித்தா மருத்துவரான சிவன் நாயர். இவர் வீட்டிலேயே மருத்துவம் பார்த்து வந்தார். இவரது மனைவி பிரசன்னா குமாரி. இவர் மத்திய அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

இந்த தம்பதியின் மகன் இதே பகுதியில் சித்த மருத்துவம் பார்த்து வருகிறார். இவரது மகள் வெளிநாட்டில் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வழக்கம் போல நேற்று இரவு(ஞாயிற்றுக்கிழமை) மருத்துவர் சிவன் நாயர் நோயாளிகளுக்கு சிகிச்சைப் பார்த்து வந்தார்.

அப்போது சிகிச்சை பார்ப்பது போல வந்த மர்ம நபர்கள் சிவன் நாயர் மற்றும் அவரது மனைவி பிரசன்னா குமாரி ஆகியோரை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளனர். இது குறித்து அக்கம் பக்கத்தினர் முத்தாபுதுப்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த முத்தாபுதுபேட்டை போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மத்திய பாதுகாப்பு துறைக்கு சொந்தமான பல்வேறு அரசு நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதியில் மாலை நேரத்தில் வெகு இயல்பாக வந்து கணவன் மனைவி ஆகியோர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட விவகாரம் அப்பகுதியில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டார். காவல் ஆணையரக துணை ஆணையர் அய்மன் ஜமால் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டு விசாரணை தொடங்கினர். இதற்கிடையே அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை சேகரித்து வரும் போலீசார், மோப்ப நாய் உதவியுடன் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.மேலும், கொலை சம்பவம் அரங்கேறிய வீட்டில் தடயவியல் நிபுணர்கள் சோதனை செய்து தடயங்களை சேகரித்து வருகின்றனர்.

மத்திய பாதுகாப்பு துறைக்கு சொந்தமான முப்படைகள் மட்டும் இன்றி படை உடை பீரங்கி தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு நிறுவனங்கள் செயல்படக்கூடிய இந்த பரபரப்பான பகுதியில் கடந்த வாரம் ரூ.1.5 கோடி ரூபாய் நகை பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று இரட்டை கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது. இதற்கு காரணம் போதிய சிசிடிவி கேமராக்கள் இல்லாததும், முறையாக போலீசார் ரோந்து பணியில் ஈடுபடாததும் தான் என அப்பகுதி வாசிகள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைக்கின்றனர்.

இதையும் படிங்க:பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில் இன்று தீர்ப்பு.. விசாரணையின் முழு விவரம்!

ABOUT THE AUTHOR

...view details