தமிழ்நாடு

tamil nadu

தேனியில் ஆட்டோ மீது கார் மோதி விபத்து.. 2 பேர் பலி - ஓடி வந்து உதவிய ஓ.பி.ரவீந்திரநாத்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 22, 2024, 9:06 PM IST

Road Accident: தேனி தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் 4 வயது சிறுவன் உட்பட 2 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். இந்நிலையில் அவ்வழியாகச் சென்ற தேனி எம்.பி ஓ.பி ரவீந்திரநாத் குமார் விபத்தில் சிக்கிய மற்ற நபர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உதவினார்.

Road accident theni mp ravindranath help
Road accident theni mp ravindranath help

தேனியில் ஆட்டோ மீது கார் மோதி விபத்து... 2 பேர் பலி - ஓடி வந்து உதவிய ஓ.பி.ரவீந்திரநாத்

தேனி: தேனி - திண்டுக்கல் நெடுஞ்சாலையில் உள்ள பரசுராமபுரம் பகுதியில், பயணிகளை ஏற்றி சென்ற ஆட்டோவை பின்னே வந்த கார் முந்திச் செல்ல முயன்ற போது, எதிர்பாராதவிதமாக ஆட்டோவின் மீது கார் மோதியுள்ளது. அப்படி மோதியதில் ஆட்டோ சாலையில் தலை குப்புறக் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில், ஆட்டோவில் பயணித்த 4 வயது சிறுவன் பவின்பாண்டி மற்றும் ஆட்டோ ஓட்டுநர் அய்யனார்(50), இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் ஆட்டோவில் பயணித்த 4 பெண்களுக்குப் படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், அவ்வழியாகச் சென்ற தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் விபத்தில் காயமடைந்த பெண்களை உடனடியாக வத்தலக்குண்டு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். மேலும் விபத்தில் பலியான சிறுவன் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் இருவரின் உடலையும் பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, பின்னர் விபத்தில் பலியான குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

மேலும் இதுதொடர்பாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கொடைக்கானலைச் சேர்ந்த ரமேஷ் மற்றும் அவரது உறவினர்கள் வத்தலக்குண்டில் உறவினர்களின் திருமண விழாவிற்குச் செல்வதற்காக நேற்று கெங்குவார்பட்டி வந்து, உறவினர்கள் வீட்டில் தங்கியிருந்துள்ளனர். இந்நிலையில், இன்று காலை திருமண விழாவிற்கு அவரது உறவினரான ஆட்டோ ஓட்டுநர் அய்யனார் ஆட்டோவில் பெண்கள் மற்றும் குழந்தைகளை அனுப்பி வைத்துவிட்டு, ரமேஷ் மற்றும் அவரது உறவினர்கள் காரில் பின் தொடர்ந்து சென்றுள்ளனர்.

அப்பொழுது பரசுராமபுரம் பகுதியில் சென்ற ஆட்டோவை ரமேஷ் மற்றும் அவரது உறவினர்கள் சென்ற கார் முந்திச் செல்ல முற்பட்ட போது, இந்த விபத்து நடந்துள்ளது. எதிர்பாராத விதமாக நடந்த இந்த விபத்தில் சிறுவன் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் பலியான சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீரில் வரலாறு காணாத பனி: பனிச்சரிவில் சிக்கி வெளிநாட்டு பயணி பலி!

ABOUT THE AUTHOR

...view details